சீன வாகன உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு புதிய 'செக்'... பிரதமர் மோடியின் ஆட்டம் ஆரம்பம்!
எல்லையில் அடிக்கடி அத்துமீறி வரும் சீனாவுக்கு பதிலடி கொடுப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மேலும், அந்நாட்டுடன் வர்த்தகப் போரையும் துவங்கி இருக்கிறது.

அண்மையில் லடாக் பிரதேச எல்லையில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி சீன ராணுவத்தினர் புகுந்ததுடன், கூடாரம் அமைத்து தங்க முயன்றனர். அவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியின்போது ஏற்பட்ட கைகலப்பு மற்றும் சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பில் 40 பேர் வரை படுகாயம் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த சம்பவத்தால், இந்திய - சீன எல்லையில் பதட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், சீனாவுக்கு பல்வேறு விதத்திலும் பதிலடி கொடுப்பதற்கான முயற்சிகளில் இந்தியா இறங்கி இருக்கிறது. ராணுவ நடவடிக்கை எடுத்தால், இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள், பொருட் சேதத்தை சந்திக்க வேண்டிய நிலை இருப்பதால், ராஜாங்க ரீதியிலும், இந்தியாவில் சீன வர்த்தகத்தை முடக்குவதற்கான முயற்சிகளிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள சீன பொழுதுபோக்கு மற்றும் அலுவலக ரீதியில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்ஃபோன் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, சீன டயர்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

மேலும், மஹாராஷ்டிராவில் ஆலையை திறக்க சீனாவை சேர்ந்த கிரேட்வால் மோட்டார் கார் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. ஒப்பந்தம் சில நாட்களிலேயே அதனை மஹாராஷ்டிர அரசு நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. மேலும், சீன உதிரிபாகங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி மின்சார வாகன நிறுவனங்களை அறிவுறுத்தி இருக்கிறார்.

இந்த நிலையில், சீன உதிரிபாகங்களை தவிர்க்க முடியாது என்று மாருதி சுஸுகி உள்ளிட்ட சில கார் நிறுவனங்கள் பொது வெளியில் பேசி வருகின்றன. மேலும், நேரடியாக சீனாவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தால், அது உலக அரங்கில் இந்தியாவின் வர்த்தக கொள்கைகளுக்கு எதிராக அமையும்.

எனவே, சீன வாகன உதிரிபாகங்கள் இறக்குமதியை குறைப்பதற்கு மறைமுகமாக பல நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அதன்படி, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் தர நிர்ணய விதிகளை கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், தர பரிசோதனை முறையிலும் கடுமையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். சீன வாகன உதிரிபாகங்களை நேரடியாக பரிசோதித்து சான்று வழங்கும் திட்டம் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், டயர் உள்ளிட்ட பல வாகன உதிரிபாகங்களின் தரம் சரியாக பரிசோதிக்க முடியும் என்பதுடன், இதுவரை நடந்த முறையில் இருந்த முறைகேடுகளையும் தடுக்க முடியும்.

இதனிடையே, மத்திய அரசின் இந்த முடிவுக்கு இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது வாகன உற்பத்தியை மேலும் பின்னடவை ஏற்படுத்தும். ஏற்கனவே அதிக பாதிப்பில் இருக்கும் வாகனத் துறைக்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவித்துள்ளது.

வாகனங்களின் எஞ்சினுக்கான முக்கிய உதிரிபாகங்கள் மற்றும் மின்னணு சாதனங்களுக்கான உதிரிபாகங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவை இந்தியாவில் எந்த சப்ளையர்களிடமும் உற்பத்தி இல்லை. வாகனங்களில் நூற்றுக்கணக்கான பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு உதிரிபாகம் சப்ளை இல்லையென்றாலும், உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்த வேண்டி இருக்கும் என்று சியாம் அமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து வரும் மூலப்பொருட்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களை பயன்படுத்துவதை தவிர்த்து, இந்தியாவிலேயே வாகன உதிரிபாகங்களை சப்ளை பெறுவதற்கான முயற்சிகளை வாகன நிறுவனங்கள் எடுக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறி இருக்கிறார்.

சீன உதிரிபாகங்களை தவிர்த்து, இந்தியாவிலேயே உற்பத்தி செய்தால் முதலில் உற்பத்தி செலவீனம் அதிகரித்தாலும், அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது மின்சார வாகனங்கள் உள்ளிட்டவற்றின் விலை குறைய வாய்ப்பு ஏற்படும் நிலை உருவாகும். எனவே, இது எதிர்காலத்தில் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு வலு சேர்ப்பதோடு, வர்த்தக ரீதியில் சீனாவுக்கு மறைமுகமாக கடும் நெருக்கடியை ஏற்படும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








