ஆட்டோ எக்ஸ்போவில் கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், கொரானோ வைரஸ் பரவுவதை தவிர்க்க தக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக சியாம் அமைப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ நாளை துவங்க இருக்கிறது. இதற்காக, பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கொரானோ வைரஸ் பரவும் என்ற அச்சம் பார்வையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர் மத்தியில் உள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை ஆட்டோ எக்ஸ்போவில் அதிக அளவில் சீன கார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. எனவே, சீனாவிலிருந்து அதிகாரிகள், பார்வையாளர்கள் வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.

இந்த கூற்றை போக்கும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஆட்டோ எக்ஸ்போ ஏற்பாட்டு அமைப்புகளில் ஒன்றான சியாம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ராஜன் வதேரா வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன கார் நிறுவனங்களின் அரங்குகளில் இந்திய பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

சீனாவிலிருந்து வரும் யாரும் ஆட்டோ எக்ஸ்போ அரங்குகளில் பணியில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். சீனாவிலிருந்து பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் வருவது முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, சீனாவிலிருந்து வரும் நபர்கள் மூலமாக நேரடியாக ஆட்டோ எக்ஸ்போவில் கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஆட்டோ எக்ஸ்போவில் கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க, பார்வையாளர்களுக்கு கை சுத்தப்படுத்தும் மருந்து மற்றும் கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நடைபெறும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் வருவது வழக்கம். இந்த முறை கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, பார்வையாளர் வருகையில் பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்பாட்டாளர்கள் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








