இழுபறி செய்த டீலர்! தக்க பாடம் புகட்டிய வாடிக்கையாளர்... இனி இந்த காரியத்தை யாருமே செய்ய மாட்டாங்க!!
இழுபறி செய்த வாகன விற்பனையாளருக்கு வாடிக்கையாளர் ஒருவர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் வாயிலாக தக்க பாடம் புகட்டியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மஹாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள தஹானு பகுதியைச் சேர்ந்தவர் தானேஷ் மோத்தே. இவர், அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்கோடாவின் அதிகாரப்பூர்வ டீலரான ஜேஎம்டி ஆட்டோ பிரைவேட் லிமிடெட் வாயிலாக சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தம் புதிய காரை தனது சொந்த பயன்பாட்டிற்காக வாங்கியுள்ளார்.

இக்கார், கடந்த 2014ம் ஆண்டு இக்கார் வாங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில், வாங்கப்பட்ட சில நாட்களிலேயே காரில் பல்வேறு பிரச்னைகளை எழும்பத் தொடங்கியிருக்கின்றது. பிரேக் செயலிழப்பு, சஸ்பென்ஷன் கோளாறு மற்றும் பவர் விண்டோ செயலற்று போனது என எக்கச்சக்க பிரச்னைகளைக் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவலை புகாராக ஸ்கோடா டீலருக்கு தானேஷ் வழங்கியிருக்கின்றார். ஆனால், புகாரின் அடிப்படையில் ஸ்கோடா விற்பனையாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகின்றது. சர்வீஸுக்காக கார் ஒப்படைக்கும்போது வெறும் பொதுவான சர்வீஸ் மட்டுமே செய்யப்பட்டு தானேஷிடம் மீண்டும் கார் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.

இதனால் பெருத்த வேதனையோடு, பல்வேறு இன்னல்களை சந்திக்கும் நிலைக்கு தானேஷ் தள்ளப்பட்டுள்ளார். எனவே குறைபாடுகளுடன் காணப்படும் காரை மாற்றித் தருமாறு தானே மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அவர் நாடினார். இங்கு புகார் அளிக்கப்பட்டிருந்தநிலையிலேயே தற்போது 6 லட்சம் ரூபாய் வரை இழப்பீடாக வழங்கும்படி ஸ்கோடா வாகன விற்பனையாளருக்கு குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த ஆணையை நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் எஸ்இசட் பவார் மற்றும் அதன் உறுப்பினர் பூனம் வி மகர்ஷி ஆகியோர் வழங்கியுள்ளனர். குறைபாடுகளை நீக்குவதிலும், வாரண்டியின்கீழ் குறைபாடு இல்லாத வாகனத்தை வழங்குவதிலும் விற்பனையாளர் தவறிவிட்டதாகக் கூறி இந்த உச்சபட்ச அபராதத்தை அவர்கள் வழங்கியிருக்கின்றனர்.

இதுகுறித்து ஆணைக்குழு வெளியிட்ட உத்தரவில், "வாடிக்கையாளரின் குறைகளை நீக்குவதில் நிர்வாகம் தவறிவிட்டது. எனவே, சேவையின் குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தகம் காரணமாக நாங்கள் விற்பனையாளரை குற்றவாளிகளாக கருதுகிறோம். இருப்பினும், புகார்தாரர் 60,000 கி-மீட்டருக்கும் மேல் காரை பயன்படுத்தியுள்ளதால், அதை மாற்றுவது அல்லது முழு செலவையும் திருப்பித் தர முடியாது.

ஆகையால், புகார்தாரர் செலுத்திய தொகையில் இருந்து 75 சதவீத தொகையைத் திருப்பி தர உத்தரவிடப்படுகின்றது. இத்துடன், புகார் அளித்த தேதியில் இருந்து ஒன்பது சதவீத வட்டியுடன் அத்தொகை புகார்தாரருக்கு வழங்கப்பட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவினால் ஸ்கோடா வாகன விற்பனையாளர் ஜேஎம்டி ஆட்டோ பிரைவேட் லிமிடெட் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருக்கின்றார். அதேசமயம், வாடிக்கையாளர்களை இழுத்தடிப்பு செய்ததற்கு இந்த நிறுவனத்திற்கு கிடைத்த தக்க பாடம் என அந்நிறுவனத்தின் பிற வாடிக்கையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் மிக முக்கியமான வாகன நிறுவனங்களில் ஸ்கோடாவும் ஒன்றாக இருக்கின்றது. டாடா, மாருதி சுசுகி, ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களுக்கு எப்படி தனித்துவமான ரசிகர்கள் பட்டாளம் நாட்டில் காணப்படுகின்றதோ, அதேபோன்று, ஸ்கோடாவிற்கும் தனித்துவமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிறுவனத்தின் ஸ்டைலான மற்றும் அதி-திறன் வாய்ந்த தயாரிப்புகளே தற்போதும் ஸ்கோடா மீது இனம்புரியாத காதலை அவர்கள் வைத்திருக்க காரணமாக அமைந்துள்ளது. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே ஸ்கோடா பிரியர் ஒருவர் கசப்பான அனுபவம் மஹாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ளது. தற்போது அரங்கேறியிருக்கும் இந்த அபராதச் சம்பவம் முறைகேட்டில் ஈடுபடும் டீலர்களுக்கு சிறந்த பாடமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








