510 கிமீ ரேஞ்ச்... ஸ்கோடா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி பொது பார்வைக்கு வந்தது!
அதிக ரேஞ்ச் கொண்ட ஸ்கோடா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக என்யாக் iV மின்சார எஸ்யூவி பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு உலக அளவில் பெரிதும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில்கொண்டு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குவதில் கார் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக என்யாக் iV என்ற எஸ்யூவியை பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்இபி கட்டமைப்புக் கொள்கையின் கீழ் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே கட்டமைப்புக் கொள்கையின் கீழ்தான் ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 எலெக்ட்ரிக் காரும் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், ஸ்கோடா கார்களுக்கு உரிய தனித்துவமான அம்சங்களுடன் இது வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது. ஸ்கோடா கார் என்று சட்டென கூறும் வகையிலான க்ரில் அமைப்பு, அட்டகாசமான ஹெட்லைட் க்ளஸ்ட்டர், எல்இடி ஹெட்லைட்டுகள், வலிமையான பம்பர் அமைப்புடன் காட்சித் தருகிறது.

இந்த காரில் பிரம்மாண்டத் தோற்றத்தை வழங்கும் 18 சக்கரங்கள் மற்றும் 21 அங்குல சக்கரங்கள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. மேலும், மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவத்தில் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, அதிகபட்ச ரேஞ்ச் பெறுவதற்கான வாய்ப்பை இது பெற்றிருக்கிறது.

இந்த காரின் வெளிப்புறத்தை போலவே, உட்புறமும் மிகவும் நவீன அம்சங்களை கொண்டுள்ளது. 13 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ள்ஸ்ட்டர், குறைவான திறனில் இயங்கும் தொழில்நுட்பத்துடன் ஏசி சிஸ்டம், காரை நிறுத்தி இருக்கும்போது, சாதனங்கள் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான ஸ்லீப் மோடு வசதிகளும் உள்ளன.

இந்த காரின் பேஸ் மாடலில் ஒற்றை மின் மோட்டார் கொண்டதாக வந்துள்ளது. இந்த மின் மோட்டார் 146 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அதிகபட்சமாக 160 கிமீ வேகம் வரை செல்லும். இதுதவிர்த்து, 177 பிஎச்பி பவரையும், 310 என்எம் டார்க் திறனையும் வழங்கும் இரண்டாவது ஆப்ஷனும், 201 பிஎச்பி பவரையும், 310 என்எம் டார்க் திறனையும் வழங்கும் மூன்றாவது ஆப்ஷனும், 261 பிஎச்பி பவரையும், 425 என்எம் டார்க் திறனையும் வழங்கும் நான்காவது ஆப்ஷனிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

என்யாக் ஆர்எஸ் iV என்ற சக்திவாய்ந்த மாடலில் இரண்டு மின் மோட்டார்கள் இணைந்து 302 பிஎச்பி பவரையும், 460 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலானது 0 - 100 கிமீ வேகத்தை 6.2 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக 180 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

பேஸ் மாடலில் கொடுக்கப்படும் 55kWh பேட்டரியானது 340 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். 62kWh பேட்டரியானது 390 கிமீ வரையிலான பயண தூரத்தையும், 92kWh பேட்டரியானது 460 கிமீ தூரம் வரை செல்லும் வாய்ப்பையும் வழங்கும்.

என்யாக் 80 iV மாடலானது அதிகபட்சமாக 510 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த காரின் பேட்டரிகளை ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 38 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். சாதாரண சார்ஜர் பயன்படுத்தும்போது 6 முதல் 8 மணிநேரம் பிடிக்கும்.

திய ஸ்கோடா என்யாக் iV எலெக்ட்ரிக் காரில் 9 ஏர்பேக்குகள், மோதலை தவிர்க்கும் தொழில்நுட்பம், விபத்தின்போது கதவுகள் தானாக திறந்து கொள்ளும் வசதி என ஏராளமான பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து உலகின் பிற நாடுகளிலும் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








