நம்ப முடியாத விலையில் புதிய காரை களமிறக்கிய முன்னணி நிறுவனம்... பின்னணியில் பக்கா மாஸ்டர் பிளான்...
ஸ்கோடா நிறுவனம் நம்ப முடியாத விலையில் ரேபிட் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதன் பின்னணியில், பக்கா மாஸ்டர் பிளான் ஒன்று உள்ளது.

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறைக்கு கடந்த 2019ம் ஆண்டின் தொடக்கம் முதலே போதாத காலம்தான். பொருளாதார மந்தநிலை, பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலே இந்தியாவில் வாகனங்களின் விற்பனை சொல்லி கொள்ளும்படி அவ்வளவு சிறப்பாக இல்லை.

போதாக்குறைக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனா வைரஸ் பிரச்னையும் சேர்ந்து கொண்டு ஆட்டோமொபைல் துறையை பாடாய்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு வந்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வாகனங்களின் உற்பத்தி நடைபெறவில்லை. அத்துடன் அப்போதில் இருந்து டீலர்ஷிப்களும் தற்காலிகமாக இழுத்து மூடப்பட்டன.

இதன் காரணமாக வாகன உற்பத்தி மற்றும் விற்பனை அடியோடு முடங்கி போனது. எனினும் தற்போது ஒரு சில தளர்வுகளை அரசு வழங்கி வருவதால், கடந்த மே 4ம் தேதி முதல் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் விற்பனை இன்னும் பழைய நிலைக்கு திரும்பவில்லை. அதற்கு இன்னும் எவ்வளவு காலம் ஆகும்? என்பதையும் உறுதியாக கூற முடியாத சூழல் நிலவுகிறது.

கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால், பலரின் வேலை பறிபோயுள்ளது. வேலையிழப்புகள் அதிகரிக்க கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதலீடுகளை கவனமாக செய்வதில் பலர் கண்ணும், கருத்துமாக உள்ளனர். இதனால் வாகன விற்பனையை பற்றி கணிக்க முடியாத நிலை உள்ளது.

இதன் காரணமாக ஒரு சில நிறுவனங்கள் தங்கள் இலக்குகளை குறைத்து கொள்ள கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில், ஸ்கோடா நிறுவனமோ மிக பிரம்மாண்டமான இலக்கை எட்டுவதில் தீவிரமாக உள்ளது. இந்திய மார்க்கெட்டில் ஸ்கோடா அவ்வளவு பிரபலமான நிறுவனம் கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

போதாக்குறைக்கு அந்த நிறுவனத்தின் கார்கள் விற்பனை தற்போதைய சூழலில் சரிந்து கொண்டு வருகிறது. ஸ்கோடா நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டில் 16,692 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை அதன்பின் வந்த 2019ம் ஆண்டில் 15,284 ஆக சுருங்கி போனது. தற்போதைய நிலையில் ஸ்கோடா நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் வெறும் 0.52 சதவீதம் மட்டுமே.

இப்படிப்பட்ட சூழலில், வரும் 2025ம் ஆண்டிற்குள், இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 1 லட்சம் கார்களை விற்பனை செய்வது என ஸ்கோடா நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. கொரோனா பிரச்னையால் அந்த இலக்கில் இருந்து பின்வாங்க போவதில்லை என ஸ்கோடா நிறுவனம் உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வரும் 2025ம் ஆண்டிற்குள் 5 சதவீத மார்க்கெட் ஷேரை கைப்பற்றவும் ஸ்கோடா நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதன் மூலம் வரும் 2025ம் ஆண்டிற்குள், இந்தியாவை தனது டாப்-5 மார்க்கெட்களில் ஒன்றாக கொண்டு வர ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை எட்டும் முயற்சிகளின் ஒரு பகுதியாக வரும் 2021ம் ஆண்டிற்குள் 7,900 கோடி ரூபாயை ஸ்கோடா முதலீடு செய்யலாம் என கூறப்படுகிறது.

மேலும் புதிய வாகனங்களை களமிறக்கவும் ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது மிகப்பெரிய இலக்கு என்றாலும், அதற்கான பணிகளை ஸ்கோடா ஏற்கனவே தொடங்கி விட்டது. ரேபிட், சூப்பர்ப் மற்றும் கரோக் என மூன்று புதிய தயாரிப்புகளை ஸ்கோடா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் நேற்று முன் தினம் (மே 26ம் தேதி) விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இதில், ரேபிட் காரின் ஆரம்ப விலையை ஸ்கோடா நிறுவனம் 7.49 லட்ச ரூபாயாகவும், சூப்பர்ப் காரின் ஆரம்ப விலையை 29.99 லட்ச ரூபாயாகவும், கரோக் காரின் ஆரம்ப விலையை 24.99 லட்ச ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது. இதில், ரேபிட் கார்தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனெனில் இது நம்ப முடியாத விலை நிர்ணயம் ஆகும்.

ரேபிட் காருக்கு மிகவும் சவாலான விலையை நிர்ணயம் செய்ததன் மூலமாக, போட்டியாளர்களை ஸ்கோடா நிறுவனம் கதிகலங்க வைத்துள்ளது. ஸ்கோடா நிறுவனம் தனது இலக்கை எட்டுவதில் எவ்வளவு உறுதியாக உள்ளது? என்பதை இதன் மூலமாக புரிந்து கொள்ள முடிகிறது. இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்ற வகையில் கார்களின் விலையை நிர்ணயம் செய்தால், ஸ்கோடாவால் இந்த இலக்கை எட்ட முடியும் என்பது உறுதி.

அதே சமயம் விற்பனைக்கு பிந்தைய சர்வீஸில் தலை சிறந்து விளங்குவதும் அவசியம். பிரம்மாண்டமான சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கை கொண்டிருப்பதால்தான், மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்திய மார்க்கெட்டில் கொடி கட்டி பறந்து வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதனை ஸ்கோடா நிறுவனம் புரிந்து கொள்ளாமல் இல்லை. பிரம்மாண்ட இலக்கை எட்டுவதற்கு ஏற்ப இந்திய மார்க்கெட்டில் டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கும் ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே தற்போது அங்கொன்றும், இங்கொன்றுமாய் உள்ள ஸ்கோடா டீலர்ஷிப்கள் வரும் காலங்களில் நம் கண்களில் அதிகம் தென்படலாம்.


Click it and Unblock the Notifications








