ஒரே நாளில் இந்தியாவில் அறிமுகமாகும் மூன்று புதிய ஸ்கோடா கார்கள்!
ஒரே நாளில் மூன்று புதிய கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மேலும், கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் வர்த்தக செயல்பாடுகளை துவங்குவதற்கான விதி தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனை பயன்படுத்திக் கொண்டு வாகன நிறுவனங்கள் வர்த்தகத்தை எழுச்சிப் பெற செய்யும் முயற்சிகளில் இறங்கி உள்ளன. அந்த வகையில், ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் மூன்று புதிய கார் மாடல்களை இந்தியாவில் ஒரே நாளில் விற்பனைக்கு கொண்டு வர நாள் குறித்துள்ளது.

ஆம், இந்திய வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி, ரேபிட் மற்றும் சூப்பர்ப் கார்களின் பிஎஸ்6 மாடல்கள் வரும் 26ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.

இதில், புத்தம் புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி மிட்சைஸ் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் சற்றே அதிக விலை கொண்ட பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும். இந்த எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட உள்ளது. இதன் எஞ்சின் அதிகபட்சமாக 150 எச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

இந்த காரில் பனோரமிக் சன்ரூஃப், வெர்ச்சுவல் காக்பிட் தொழில்நுட்பத்திலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 9 ஏர்பேக்குகள் ஆகியவற்றுடன் வர இருக்கிறது. இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருப்பதால் விலையும் போட்டியாளர்களை விட அதிகமாக நிர்ணயிக்கப்படும்.

அடுத்து ஸ்கோடா சூப்பர்ப் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் இந்தியாவில் அன்றைய தினம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 எச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்டது. 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு வருகிறது. ரூ.30 லட்சத்தையொட்டிய விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 26ந் தேதி மூன்றாவது மாடலாக ஸ்கோடா ரேபிட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே வழங்கப்பட்ட பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளுக்கு பதிலாக புதிய 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 110 எச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் வருகிறது.

புதிய ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 மாடலுக்கு ஏற்கனவே முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது. விற்பனைக்கு வந்த உடன் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும் என தெரிகிறது. மாருதி சியாஸ், புதிய ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி கார்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








