பவர்ஃபுல் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் ஒரு கை பார்க்க வரும் ஸ்கோடா கோடியாக்!
கொரோனாவால் ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடல் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சக்திவாய்ந்த டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, டீசல் மாடல்களின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. பல கார் மாடல்கள் பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், டீசல் எஞ்சின் பிரியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், அதிசெயல்திறன் மிக்க டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளும் பல மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது கார்களில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுடன் கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தனது கோடியாக் எஸ்யூவியிலும் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வை அறிமுகப்படுத்த உள்ளது ஸ்கோடா.

இந்த எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் குறித்து டிவிட்டரில் பதில் அளித்துள்ள ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஸாக் ஹொல்லிஸ்," அடுத்த ஆண்டு துவக்கத்தில் கோடியாக் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளது," என்று தெரிவித்துள்ளா்.

அதன்படி, கோடியாக் எஸ்யூவியில் வழங்கப்பட உள்ள 2.0 லிட்டர் டர்போ டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் வர இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவியிலும், ஸ்கோடா சூப்பர்ப் காரிலும் இதே எஞ்சின் ஏற்கனவே இந்தியாவில் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே வழங்கப்பட்ட 2.0 டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 340 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த டீசல் எஞ்சினைவிட விரைவில் வரும் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் 39 பிஎச்பி பவரையும், 20 என்எம் கூடுதல் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு மட்டுமின்றி, வெர்ச்சுவல் காக்பிட் தொழில்நுட்பத்தை வழங்கும் நவீன இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு, மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மாடலானது சொகுசு மார்க்கெட்டில் உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்1 உள்ளிட்ட மாடல்களுக்கும், டொயோட்டா ஃபார்ச்சூனர், ஹோண்டா சிஆர்வி, ஃபோக்ஸ்வேகன் டிகுவான் உள்ளிட்ட மாடல்களுக்கும் சரியான போட்டியாக அமையும்.


Click it and Unblock the Notifications








