புதிய ஆக்டேவியா காரின் இந்திய அறிமுகம் தள்ளி போகிறது.. உறுதி செய்த ஸ்கோடா...
கொரோனா வைரஸின் பரவலால் உலகளவில் அனைத்து வணிகங்களும் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளன. இந்தியாவில் வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியாக ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான வணிகங்களில் ஆட்டோமொபைல் துறையும் தப்பவில்லை. இதனால் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளின் அறிமுகங்களில் முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்டு வருகின்றன. இந்த வகையில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா, அதன் புதிய ஆக்டேவியாவின் அறிமுகத்தை திட்டமிட்டு தேதியில் இருந்து தள்ளி வைத்துள்ளது.

முன்னதாக ஸ்கோடாவின் இந்த புதிய மாடல் வருகிற அக்டோபர் மாதத்தில் அறிமுகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் #LiveWithAutocar என்ற ஹேஸ்டேக்கின் வாயிலாக இன்ஸ்டாகிராமில் வாடிக்கையாளர்களுடன் உரையாடிய ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஜாக் ஹோலிஸ் புதிய ஆக்டேவியா காரின் அறிமுகம் தாமதமாகியுள்ளதை உறுதி செய்துள்ளார்.

மேலும் ஜாக் கூறுகையில், ஆமாம், கொரோனா வைரஸின் தாக்கம் எங்களது திட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆக்டேவியாவின் இந்திய வருகை 2021ஆம் ஆண்டின் முதற்பாதியில் இருக்கலாம் என கூறினார். புதிய ஸ்கோடா ஆக்டேவியா ரேஸர்-கூர்மையான பொனெட் லைன்களுடன் டிசைனை பெற்றுள்ளது.

இதனுடன் புதிய மேட்ரிக்ஸ் எல்இடி தொழிற்நுட்பம் (கூடுதல் தேர்வாக), கிடைமட்ட எல்இடி ஃபாக் விளக்குகள் இணைக்கப்பட்ட க்ரோம் ஸ்ட்ரிப் உடன் உள்ளது. காரின் பின்புறத்தில் பூமராங் வடிவத்தில் முழு-எல்இடி டெயில்லைட்கள், வழக்கமான ஸ்கோடா லோகோவிற்கு பதிலாக எழுத்து வடிவிலான லோகோ உடன் உள்ளன.

உட்புறத்தில் புதிய ஆக்டேவியா மாடல் புத்துணர்ச்சியான தோற்றத்தில் கேபினை கொண்டுள்ளது. இதன் கேபினில் கண்ட்ரோல் பொத்தான் உடன் பிடிப்பதற்கு ஏதுவான 2-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம், 10.25 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 3-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், எலக்ட்ரிக் பார்க்கிங் ப்ரேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

மற்ற தொழிற்நுட்ப வசதிகளாக இந்த காரில் கேன்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் யூஎஸ்பி-சி போர்ட்ஸ் போன்றவை உள்ளன. இவற்றுடன் வாடிக்கையாளர்கள் ஹெட்-அப் திரை, ஹீட்டட் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் கீலெஸ் வாகன எண்ட்ரீ சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் கூடுதல் தேர்வாக பெறலாம்.

என்ஜின் அமைப்பாக புதிய ஆக்டேவியா மாடலில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜினை ஸ்கோடா நிறுவனம் பொருத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 188 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது.

இதேபோல் மற்றொரு என்ஜின் தேர்வாக 1.5 லிட்டர் டிஎஸ்ஐ 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக காருக்கு வழங்கும்.

ஆக்டேவியா மாடலுக்கு சந்தையில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருவதால் இந்த புதிய மாடலை மிக விரைவாக விற்பனை கொண்டு வரவே ஸ்கோடா நிறுவனம் முயற்சிக்கும். மேலும் இந்த மாடலின் புதிய தலைமுறை கார் சந்தைக்கு வந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்களாகிவிட்டதால், இந்த புதிய காரை அட்டகாசமான டிசைனிலும் தொழிற்நுட்பங்களிலும் இந்நிறுவனம் வடிவமைத்திருக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








