புதிய ஸ்கோடா ரேபிட் டர்போ பெட்ரோல் மாடலின் அறிமுக விபரம்!
ஸ்கோடா ரேபிட் காரின் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுக விபரம் மற்றும் முக்கிய விபரங்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக ஸ்கோடா ரேபிட் உள்ளது. ஆனால், ஸ்கோடா நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவையில் உள்ள சில குறைகள்தான் இந்த கார் மார்க்கெட்டை சரிவர முன்னுக்கு கொண்டு வரவில்லை. இந்த நிலையில், பிஎஸ்-6 விதிகளுக்கு ஒப்பான எஞ்சினுடன் புதிய ஸ்கோடா ரேபிட் கார் வர இருக்கிறது.

கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் பிஎஸ்-6 ஸ்கோடா ரேபிட் கார் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த மாடலானது புத்தம் புதிய எஞ்சின் தேர்வில் வர இருப்பதும் தெரிய வந்தது. அதாவது, இப்போது உள்ள 1.6 லிட்டர் பெட்ரோல்எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்கள் விலக்கிக் கொள்ளப்பட உள்ளது.

இதற்கு மாற்றாக, பிஎஸ்-6 தர அம்சம் கொண்ட புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு புதிய ஸ்கோடா ரேபிட் காரில் வழங்கப்பட உள்ளது. இந்த மாடலில் இருக்கும் டர்போ பெட்ரோல் எஞ்சின் 113 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். இதுவரை பிஎஸ்-4 மாடலில் வழங்கப்பட்ட டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வு விலக்கிக் கொள்ளப்பட உள்ளது. இதனை ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு இயக்குனர் ஸாக் ஹோலிஸ் உறுதிப்படுத்தி உள்ளார்.

புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு தவிர்த்து, சில புதிய அம்சங்களுடன் ஸ்கோடா ரேபிட் காரின் மான்ட்டே கார்லோ எடிசன் மாடலும் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. விசேஷமான வர்ண பூச்சு மற்றும் 17 அங்குல அலாய் வீல்கள் இந்த மாடலின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய ரேபிட் காரில் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடல் தவிர்த்து, சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் மாடலையும் சிறிது காலம் கழித்து இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் இந்த புதிய பிஎஸ்-6 ரேபிட் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இதே 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வானது ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் மாடலும் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய தலைமுறை ரேபிட் செடான் கார் மாடலானது ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்ம் அடிப்படையில் இந்தியாவுக்கான பிரத்யேக அம்சங்களுடன் உருவாக்கப்பட இருக்கிறது.
Source: Zigwheels


Click it and Unblock the Notifications








