ஸ்கோடா ரேபிட் கார் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் அறிமுகம்!
ஸ்கோடா ரேபிட் காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு நிகரான புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுடன் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஸ்கோடா ரேபிட் கார் சிறந்த தேர்வாக இருப்பதுடன் தனி வாடிக்கையாளர் வட்டத்தையும் வைத்துள்ளது. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதால், அதற்கு தக்கவாறு ஸ்கோடா ரேபிட் காரில் புதிய எஞ்சின் தேர்வு வழங்கப்பட இருக்கிறது.

இதுவரை ஸ்கோடா ரேபிட் காரில் வழங்கப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் விரைவில் விற்பனையிலிருந்து விலக்கப்பட இருக்கின்றன. இனி புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் பிஎஸ்-6 தரத்திற்கு இணையானது.

புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 115 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதுவரை வழங்கப்பட்ட எஞ்சின் தேர்வுகளை விட இது சக்திவாய்ந்ததாக இருக்கும்.

மேலும், புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். முதல்முறையாக ரேபிட் பெட்ரோல் மாடலில் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட உள்ளது.

இந்த புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தவிர்த்து, சிஎன்ஜியில் இயங்கும் ரேபிட் கார் மாடலையும் கொண்டு வருவதற்கு ஸ்கோடா ஆட்டோ திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை விரைவில் எதிர்பார்க்கலாம்.

ரூ.9 லட்சம் முதல் ரூ.14 லட்சம் விலையில் புதிய ஸ்கோடா ரேபிட் கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதம் புதிய ஸ்கோடா ரேபிட் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாத பிற்பாதியில் முன்பதிவும் துவங்கப்படும். மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








