ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுக தேதி விபரம்!
மிட்சைஸ் செடான் வாங்க திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள, ஸ்கோடா ரேபிட் காரின் ஆட்டோமேட்டிக் மாடலின் அறிமுக தேதி விபரம் வெளியாகி உள்ளது.

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஸ்கோடா ரேபிட் கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு சிறந்த மாற்றுத் தேர்வாகவும் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. சிறந்த கட்டுமானம், நேர்த்தியான டிசைன் ஆகியவை இதற்கு வலுசேர்த்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த மே மாதம் பிஎஸ்6 தரத்திற்கு இணையான புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் ஸ்கோடா ரேபிட் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ரூ.7.49 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் வந்தததால், வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. அதேநேரத்தில், மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைத்தது.

இந்த நிலையில், வரும் 17ந் தேதி ஸ்கோடா ரேபிட் காரின் ஆட்டோமேட்டிக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஸ்கோடா ரேபிட் காரில் இருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 108 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இந்த எஞ்சினுடன் தற்போது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்பட உள்ளது. இந்த மாடலானது லிட்டருக்கு 16.24 கிமீ மைலேஜை வழங்கும் என்று ஸ்கோடா ஆட்டோ தெரிவிக்கிறது.

இதுகுறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா இயக்குனர் ஸாக் ஹொல்லிஸ் கூறுகையில்,"அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் மாடல்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. செயல்திறன், எரிபொருள் சிக்கனம் என இரண்டிலும் இது சிறப்பானதாக இருப்பதால் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

மேனுவல் மாடல்களை போன்றே, போட்டியாளர்களுக்கு சவால் கொடுக்கும் விலையில் புதிய ஸ்கோடா ரேபிட் கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மிட்சைஸ் செடான் கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








