இருளிலும் கண்டுபிடிக்க முடியும்! நீண்டநேரம் தடவி கொண்டிருக்க வேண்டாம்! புதிய தொழில்நுட்பம் விரைவில்!
சீட் பெல்டை எளிதில் கண்டறியக்கூடிய வகையில் புதிய தொழில்நுட்பத்தை ஸ்கோடா நிறுவனம் அறிமுகப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு வசதிக்காக கார்களில் வழங்கப்படும் அம்சங்களில் சீட் பெல்டும் ஒன்று. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எப்படி தலைக் கவசம் அவசியமானதோ, அதோபோன்று நான்கு சக்கர வாகன ஓட்டிகளின் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சமாக சீட் பெல்ட் இருக்கின்றது. எனவேதான் இதனைக் கட்டாயம் என போக்குவரத்து விதிகள் கூறுகின்றன.

ஆனால், பெரும்பாலானோர் இதை அணிவதை ஏதோ மலையைச் சுமப்பதாக எண்ணிக்கொள்கின்றனர். ஆம், குறிப்பிட்ட சில வாகன ஓட்டிகள் இதனை அணிவதே இல்லை. இதற்காக போலீஸாரிடத்தில் சிக்கி அபராதத்தையும் பெற்றுக் கொள்கின்றனர்.

இந்த அம்சத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தே அரசும், வாகன உற்பத்தி நிறுவனங்களும் இது சார்ந்த வசதிகளையும், விதிகளையும் நாளுக்கு நாள் புதுப்பித்து வருகின்றன.

அந்தவகையில், உலகின் புகழ்வாய்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்கோடா, சீட் பெல்டை எளிதில் கண்டறிவதற்கான புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கல் வெளியாகியுள்ளன. பொதுவாக, புதிய மற்றும் நமது நண்பர்களுடைய வாகனங்களை இயக்கும்போது சீட் பெல்டின் பக்கிள் (பொருத்தும் இடம்) பகுதி எங்கு இருப்பதைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்படும். இதனாலயே பெரும்பாலானோர் சீட் பெல்ட் அணிவதைக்கூட தவிர்த்துவிடுகின்றனர்.

இத்தகைய சிக்கலைப் போக்கும் விதமாக ஸ்கோடா இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. இது இருட்டிலும் ஒளிரும் தன்மைக் கொண்டதாகும். எனவே, அதனைக் கண்டுபிடிப்பது மிக சுலபம். இதுதவிர, பன்முக நிறங்களில் இது வழங்கப்பட இருக்கின்றது. இது ஓட்டுநர் மற்றும் சக பயணிக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்க உதவும்.

அதிகரித்து வரும் வாகனம் மற்றும் விபத்து ஆகியவற்றிற்கு சீட் பெல்ட் கட்டாயமாகி வருகின்றது. இந்த நிலையிலேயே சீட் பெல்ட் அணிவதைத் தூண்டும் வகையில் ஸ்கோடா இந்த சிறப்பு வசதியை அதன் தயாரிப்புகளில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. விரைவில், இந்த புதிய வசதி அதன் கார்களில் இடம்பெறும் என நம்பப்படுகின்றது.

இந்த சீட் பெல்டை பொருத்தியதை உறுதிச் செய்யும் வகையில் பச்சை நிற மின் விளக்கு ஒளிரும். ஆம், ஒரு முறை நாம் சீட் பெல்டைப் பொருத்திய பின் வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும் மின் விளக்குகள், கொக்கிகள் பொருத்தப்பட்ட உடன் அது பச்சை நிறத்திற்கு மாறிவிடும். இதன் மூலம் கொக்கி முழுமையாகப் பொருத்தப்பட்டிருப்பதை நம்மால் அறிந்துக் கொள்ள முடியும்.

ஆகையால், நம்முடன் வரும் நம்முடைய குடும்பத்தினர் அல்லது பயணிகளுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்க முடியும். குறிப்பாக, எல்இடி மின் விளக்குகள் இதில் இடம்பெற்றிருப்பதால் அடர்ந்த இருட்டில்கூட பக்கிள்களை எளிதில் கண்டறிந்து, அதில், கொக்கிகளைச் செருக முடியும்.

ஸ்கோடா இதுபோன்ற தனித்துவமான வசதிகளைத் தன்னுடைய கார்களில் பயன்படுத்தி வருகின்றது. அந்தவகையில், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மற்றும் மக்களை ஈர்க்கக்கூடிய அம்சமாக இது உருவாக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பாதுகாப்பு விதிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. இம்மாதிரியான சூழ்நிலையில் ஸ்கோடா இந்த தயாரிப்பு வரவேற்கதக்கதாகக் காட்சியளிக்கின்றது.
குறிப்பு: 6 மற்றும் 7 இரு புகைப்படங்களைத் தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








