இந்தியாவுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படும் புதிய ஸ்கோடா செடான் கார்!
ரேபிட் காருக்கு மாற்றாக, புதிய செடான் கார் மாடலை இந்தியாவுக்காக பிரத்யேகமாக ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த காரின் அறிமுக விபரமும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் புராஜெக்ட் 2.0 என்ற பெயரில் புதிய கார் மாடல்களுடன் வர்த்தகத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஸ்கோடா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. புனே நகரில் உள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் புதிய கார்களை உருவாக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில், ரேபிட் காருக்கு மாற்றாக வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை ரேபிட் கார் மாடலை இந்தியாவில் ஸ்கோடா அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த கூற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், ரேபிட் காருக்கு மாற்றாக இந்தியாவில் புத்தம் புதிய செடான் கார் மாடலை அறிமுகம் செய்ய ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் ஸாக் ஹொல்லிஸ் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். அடுத்த ஆண்டு இறுதியில் புதிய செடான் கார் மாடலை இந்தியாவில் களமிறக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB பிளாட்ஃபார்மை தழுவி இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட MQB AO என்ற விசேஷ கட்டமைப்புக் கொள்கையில் இந்த புதிய செடான் கார் உருவாக்கப்பட்டு வருகிறது.

தற்போது விற்பனையில் இருக்கும் ரேபிட் கார் மாடலைவிட இந்த புதிய செடான் கார் பரிமாணத்தில் பெரிய மாடலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செடான் காரில் டீசல் மாடல் அறிமுகம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு, டீசல் மாடல் இருக்காது, டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்படும் ரேபிட் செடான் கார் மாடலானது புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி உள்ளிட்ட மாடல்களுக்கு கடுமையான நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








