'மிக மோசமான நிலை வந்தாலும் சம்பளம் கட் கிடையாது' -பணியாளர்களின் வயிறை குளிர்வித்த பிரபல நிறுவனங்கள்!
2020ம் ஆண்டு இதைவிட மிக மோசமான நிலையை ஏற்படுத்தினாலும் சம்பளம் பிடித்தல் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட செயல்களை மேற்கொள்ளப் போவதில்லை என பிரபல நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

மனித இனத்திற்கே பேராபத்தை விளைவிக்கின்ற வகையில் உயிர்கொல்லி வைரஸ் கொரோனா உலகம் முழுவதும் பரவி வருகின்றது. இந்த வைரஸ் பரவலின் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் அதன் வாசல் கதவுகளை அடைத்துவிட்டன. குறிப்பாக, வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்கு ஊரடங்கு உத்தரவு போன்ற சில கசப்பான நடவடிக்கைகளை அவை மேற்கொண்டிருக்கின்றன.

இதே நிலைதான் தற்போது இந்தியாவில் நிலவி வருகின்றது. இந்த நிலையினால் நாட்டின் அனைத்துத்துறைகளும் இயக்கமற்று காணப்படுகின்றன. இதனால், ஏழை மற்றும் எளிய மக்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, தினக்கூலித் தொழிலாளர்கள் அன்றாட அத்தியாவசிய பொருட்களுக்கே திண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

வைரஸ் பாதிப்பால் மக்கள் அவதிக்குள்ளாவதைக் காட்டிலும், பட்டினி மற்றும் பஞ்சம் போன்றவற்றால் அவர்கள் அதிகம் பாதிப்படைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஒரு சில நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பின் காரணமாக சம்பளத்தை பிடித்தல் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இம்மாதிரியான நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என அரசு அறிவுறுத்தியும் இத்தகையான கசப்பான செயல்களை அவை செய்து வருகின்றன.
இந்நிலையில், ஐரோப்பாவைச் சேர்ந்த மிகப்பெரிய கார் தயாரிப்பு ஜாம்பவான ஸ்கோடா-ஃபோக்வேகன் மற்றும் சீன நிறுவனமான எம்ஜி மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள், சம்பளம் பிடித்தல் மற்றும் பணி நீக்கம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை இந்தியாவில் மேற்கொள்ளப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளன.

இதேமாதிரியான ஓர் அறிவிப்பைதான் ரெனால்ட் நிறுவனமும் வெளியிட்டுள்ளது.
சம்பளம் வழங்குவது மட்டுமின்றி தன்னுடைய பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனரா என்பதை உறுதிச் செய்கின்ற வகையிலான செயல்பாட்டிலும் இந்நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் தற்போதும் வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் பணியைத் தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்தியாவில் மிகப்பெரிய முதலீட்டை செய்வதற்கான பணியிலும் இந்நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, புது மாடல்களை களமிறக்கும் நோக்கில் இந்த முதலீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களின் உணர்வுகளை மதிப்பதகாவும், எனவே போனஸை பிடித்தமில்லாமல் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், சில காலங்கள் இழுத்தடிப்பு மட்டும் இருக்கும் கூறியிருக்கின்றது. அதாவது, சந்தை நிலவரம் பழைய நிலைக்கு மீண்டு வந்த பின்னரே போனஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்களின் இந்தியாவிற்கான நிறுவனர் குர்பிரதாப் கூறியதாவது, "சில தேவையற்றை செலவுகளை தடுக்கும் முயற்சியில் நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது. இதனால் பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவர்களுக்கான சம்பளம் செலுத்தப்படும். வேலை பறிப்பும் செய்யப்படாது. இதற்கான அறிவிப்புகளை பணியாளர்களுக்கு நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது" என்றார்.

ரெனால்ட் நிறுவனத்தின் இந்தியாவிற்கான நிறுவனர் வெங்கட்ராம் மமில்லபல்லே கூறியதாவது, "தற்போதைய நிலையைக் கண்டு மக்கள் பதற்றமாக இருக்கின்றனர். சம்பளம், வேலை ஆகியவை பறிபோகிவிடுமோ என அஞ்சுகின்றனர். நிர்வாகத்திடம் இம்மாதிரியான ஓர் எண்ணம் இல்லவே இல்லை. நிச்சயம் சம்பளம் மற்றும் வேலைக்கு நாங்கள் உறுதியளிக்கின்றோம்" என்றார்.

இதேபோன்று எம்ஜி நிறுவனமும் அதன் ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, சம்பளம் பிடித்தல் அல்லது வேலையை விட்டு பணியாளர்களை நீக்குதல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளது. இந்தாண்டில் என்ன மோசமான நிலை ஏற்பட்டாலும் இதில் இருந்து பின் வாங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








