இந்த டிராக்டர் இவ்ளோ சக்தி வாய்ந்ததா? இதைதான் சோனு சூட் விவசாயிக்கு பரிசாக வழங்கினாரா! நல்ல மனசுங்க!
ஆந்திராவைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு நடிகர் சோனு சூட் டிராக்டர் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார். இந்த டிராக்டரின் விலை மற்றும் திறன்குறித்த தகவலை தொடர்ச்சியாக இந்த பதிவில் காணலாம்.

கடந்த சில தினங்களாக டுவிட்டர், முகப்புத்தகம், வாட்ஸ்-ஆப் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வீடியோவில், விவசாயி ஒருவர் மாடுகளுக்கு பதிலாக ஏர் கலப்பையை இரு பெண்களைக் கொண்டு உழவு செய்யும் காட்சிகள் அடங்கியிருந்தன. இந்த வீடியோ நாடு முழுவதும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓர் விவசாயிடம் நிலத்தை உழுவகூட மாடுகள் இல்லாத நிலை இந்த நாட்டில் உருவாகியுள்ளதா? என்ற கேள்வி நாட்டு மக்கள் மத்தியில் எழும்பியது?. அதேசமயம், இந்த வீடியோவை பார்த்த ஒரு சிலர் தற்போது நிலவி வரும் இக்கட்டான சூழ்நிலையைக் காரணம் காட்டி அந்த நபர் விநோத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் எண்ணினர்.

ஆனால், உண்மையில் அந்த விவசாயியிடம் மாடுகள் இல்லாத காரணத்தினாலயே தனது இரு மகள்களைக் கொண்டு நிலத்தை விவசாயத்திற்கு தயார்படுத்தியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி நாட்டு மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், அவர்களின் கண்களையும் கலங்க வைத்தது. இந்தநிலையில்தான், இந்த சம்பவம்குறித்த மற்றுமொரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

அதில், அந்த விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் புத்தம் புதிய டிராக்டர் முன்பு நிற்பதைப் போன்ற காட்சிகள் அடங்கியிருந்தன. இதனைப் பிரபல திரைப்பட நடிகரான சோனு சூட் (Sonu Sood) தாமாக முன் வந்து ஆச்சரிய பரிசாக வழங்கியதாக கூறப்படுகின்றது. இதன்மூலம் திரைப்படங்களில் வில்லனாக தோன்றி வரும் சோனு தற்போது நிஜ வாழ்க்கை ஹீரோவாக மாறியுள்ளார்.

ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தக்காளி விவசாயியான நாகேஸ்வர ராவ் என்பவருக்கே சோனு சூட் புத்தம் புதிய டிராக்டரை பரிசாக வழங்கியிருக்கின்றார். முன்னதாக இரு உழவு மாடுகளை வழங்க இருப்பதாக அறிவித்திருந்த அவர், திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டு சோனாலிகா நிறுவனத்தின் அதி திறன் கொண்ட டிராக்டரை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இந்த டிராக்டர் சோனாலிகா நிறுவனத்தின் சிகந்தர் மாடல் டிராக்டர் ஆகும். இது பன் முக தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதாவது இரு சக்கர இயக்கம் அல்லது நான்கு சக்கர இயக்கம் மற்றும் வெவ்வேறு விதமான எஞ்ஜின் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் அது விற்பனைக்குச் செய்யப்பட்டு வருகின்றது. மேலும், இது இந்தியாவில் ரூ. 5.20 லட்சம் தொடங்கி ரூ. 7.11 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இதில், எந்ந மாடல் நாகேஸ்வர ராவிற்கு வழங்கப்பட்டுள்ளது என தெரியவில்லை.
இருப்பினும், சோனாலிகா சிகந்தர் தேர்வில் கிடைக்கும் அனைத்து டிராக்டர்களே அதி திறன் வாய்ந்தவை என கூறப்படுகின்றது. இது எம்மாதிரியான நிலமாக இருந்தாலும் வெகு விரைவில் உழவு செய்வதற்கா தயார்ப்படுத்திவிடும். இத்தகைய சிறப்பு வாய்ந்த டிராக்டரைதான் நடிகர் சோனு சூத் விவசாயிக்கு ஆச்சரியாக பரிசாக வழங்கியிருக்கின்றார்.

சோனு சூட்-இன் இந்த நடவடிக்கை ஆந்திர மக்கள் மத்தியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தற்போது அவரை பலரும் இணையம் வாயிலாக பாராட்டு மழையில் நனைத்து வருகின்றனர். இதில், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் ஒருவர்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்ட அவர், சித்தூரைச் சேர்ந்த விவசாய குடும்பத்தினருக்கு உடனடியாக சோனு சூட் உடனடிாக உதவி புரிந்தமைக்கு நன்றி. நான் அவரின் இரு மகள்களின் படிப்பு மற்றும் எதிர்கால கனவுகளைத் தொடர உதவ முடிவு செய்துள்ளேன்" என தெரிவித்தார். இதன்மூலம், சித்தூரைச் சேர்ந்த விவசாயிக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்றே கூறலாம்.

விவசாயி நாகேஸ்வர ராவின் மூத்த மகள் தற்போது இடைநிலை பட்டப்படிப்பை முடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவரது இரண்டாம் மகள் தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகின்றார். நாகேஸ்வர ராவ், தற்போது கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியைப் போக்க தற்காலிக தொழிலாக டீ வியாபாரம் செய்து வருகின்றனர். ஆனால், அவரது முக்கியமான தொழில் விவசாயம் ஆகும்.

ஏற்கனவே இருந்த நிதி நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களுக்கே அவரது மாடுகள் விற்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. மேலும், தற்போது நீடித்து வரும் வறுமையான நிலையில் புதிய மாடுகளை வாங்க முடியாத என்ற காரணத்தால் மகள்களை வைத்து உழத் தொடங்கியிருக்கின்றார். இந்த நிலையிலேயே அவர்களை உதவிகள் தேடி வர ஆரம்பித்துள்ளன.

சோனு சூட் வட இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு போன்ற தென்னிந்திய திரையுலகிலும் பரீட்சையமான ஓர் நபராகவே இருக்கின்றார். இவரின் பெரும்பாலான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலேயே தோன்றியிருப்பார். ஆகையால், இவரை அறியாதவர் இருக்க முடியாது என்றே கூறலாம். அந்தளவிற்கு வில்லன் கதாபாத்திரத்திற்கு மிகவும் கணகச்சிதமாக பொருந்தக்கூட நபரே சோனு.

உண்மையில் நம் நாட்டில் விவசாயிகள் பலர் நாகேஸ்வர ராவைப் போலவே மிகவும் மோசமான நிதி நெருக்கடியில் சிக்கி வருகின்றனர். ஏன், ஒரு சிலர் நாகேஸ்வர ராவைக் காட்டிலும் மிகவும் மோசமான நிலையில் சிக்கி தவித்து வருகின்றனர். அதிலும், இந்த கொரோனா காலத்தில் அவர்களின் நிலை மிக மிக மோசமானதாக உள்ளது. ஆனால், நம் நாட்டு ஆட்சியாளர்களோ இந்தியாவில் யாரும் பசி மற்றும் வறுமையால் தவிக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை என கூறி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, தற்போது ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே பேராபத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றுச்சூழல் வரைவை (Environmental Impact Assessment) மாற்றியமைத்து மத்திய அரசு செயல்பாட்டுக்குக் கொண்டு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவந்தால் நாட்டின் நீர் வளம், இயற்கை என அனைத்துமே மிகக் கடுமையாக பாதிப்படையும் என இயற்கை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இது விவசாயிகளை தற்போது மேலும் வருத்தமடையச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








