மூன்று சக்கரங்கள், 200 கிமீ ரேஞ்ச்... அசர வைக்கும் மின்சார கார்... இந்திய அறிமுகம் எப்போது..?
மூன்று சக்கரங்கள், 200 கிமீ ரேஞ்ச் என அசத்தலான தொழில்நுட்ப வசதிகளுடன் புத்தம் புதிய மின்சார கார் ஒன்று இந்தியாவில் விரைவில் களமிறங்க இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலகம் முழுவதும் மின் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணமே எரிபொருள் வாகனங்களால் ஏற்படும் பின்விளைவுகள்தான். ஆகையால், விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை வீழ்த்தி, அவற்றிற்கு பதிலாக மின்வாகனங்களே அனைத்து சாலைகளையும் ஆளுகை செய்யவிருக்கின்றது.

இதனை தற்போதே நிரூபிக்கின்ற வகையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் கூர்மையான பார்வையை மின் வாகன உற்பத்தியின் பக்கம் திருப்பியுள்ளனர்.
அந்தவகையில், மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் ஆரம்பநிலை மின்வாகன உற்பத்தி நிறுவனமான ஸ்ட்ராம், அதன் மூன்று சக்கரங்களைக் கொண்டு இயங்கும் மின்சார வாகனம் ஒன்றை வெளியுலகிற்கு காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார் தற்போது கான்செப்ட் (முன்மாதிரி) மாடலாகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மூன்று சக்கர மின்சார கார்கள் விரைவில் விற்பனைக்கான உற்பத்தியையும் பெற இருக்கின்றது. முன்னதாக 2020ம் ஆண்டிற்கான நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் இந்த மூன்று சக்கர மின்சார கார்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த கண்காட்சியில் கலந்துக்கொள்ளும் முதல் இந்திய வாகன உற்பத்தி நிறுவனம் இதுவே ஆகும்.

ஸ்ட்ராம் ஆர்3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மூன்று சக்கர மின்சார கார் இந்த கண்காட்சியில் நல்ல வரேவற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், இந்த மூன்று சக்கர மின்சார கார்களை ஸ்ட்ராம் நிறுவனம் 2018ம் ஆண்டே அறிமுகம் செய்துவிட்டதாக கூறப்படுகின்றது. இதைத்தொடர்ந்து மீண்டும் உலகளாவிய காட்சிபடுத்துதலாக நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

தொடர்ந்து, வருகின்ற பிப்ரவரி மாதத்தில் இருந்து இந்த கார்களுக்கான புக்கிங்கும் இந்தியாவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்ற கார்களைக்காட்டிலும் தனித்துவமாக காட்சியளிக்கும் இந்த ஸ்ட்ராம் ஆர்3 கார்கள் ஆட்டோ ரிக்ஷாவின் அடுத்த பரிணாமத்தைப் போன்று காட்சியளிக்கின்றது. ஆனால், நான்கு சக்கர கார்களுக்கு இணையான வசதிகளைக் கொண்டிருப்பதால், இதனை மூன்று சக்கர கார் என்று அழைக்கின்றனர்.

அதேசமயம், சிறிய ரக ஹேட்ச்பேக் காரின் அளவிற்கு ஒத்தவாறு இது காட்சியளிக்கின்றது. அந்தவகையில், பரப்பளவு மற்றும் உயரம் என அனைத்தும் கார்களுக்கு இணையானதாக காட்சியளிக்கின்றது.

ஸ்ட்ராம் ஆர்3 காரின் முன் மற்றும் பின் பக்கத்தில் 12 இன்சிலான அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில், பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள வீல் நேரடியாக மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் 13kW மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 17.4 பிஎச்பி பவரையும், 48 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. இது சிங்கிள் ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும்.

அனைத்து விஷயத்திலும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் இந்த கார், ரேஞ்ச் விவகாரத்திலும் அசத்தலானதாக காட்சியளிக்கின்றது. இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 200 கிமீ தூரம் பயணிக்க முடியும். இதனை முழுமையாக சார்ஜ் செய்ய வெறும் 3 மணி நேரங்களே போதும். ஆனால், அதற்கு 15 ஆம்ப் பிளக் பாயின்ட் தேவைப்படுகின்றது.

இதுமட்டுமின்றி, இந்த காரில் தொழில்நுட்ப அம்சங்களாக கிளைமேட் கன்ட்ரோல், 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படட்டுள்ளன. இத்துடன் பாதுகாப்பு அம்சங்களாக பார்க்கிங் அசிஸ்ட், ரியர் கேமரா, பவர் விண்டோஸ் மற்றும் 3 பாயிண்ட் சீட் பெல்ட் உள்ளிட்ட ஏராளாமான அம்சங்கள் காணப்படுகின்றன.

விரைவில் இந்திய மின்சார வாகனச் சந்தையை ஒரு கலக்குகலக்க காத்திருக்கும் இந்த கார் என்ன விலையில் களமிறங்கும் என்று தெரியவில்லை. இருப்பினும் மலிவு விலையிலேயே களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வருகை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








