திடீரென வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் பழைய புகைப்படம்... அவரு பக்கத்துல இருக்க சொகுசு காரோட விலை, சிறப்புகள் என்ன தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பழைய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். இதனை, அவர் வழிபடும் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகளுக்கு உகந்த நாளான வியாழக்கிழமை (3 டிசம்பர்) அன்று வெளியிட்டார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மற்றும் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என எண்ணி வரும் மக்களுக்கு பெரும் குஷியை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான தகவல் வரும் டிசம்பர் 31ம் தேதி வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார். இந்த நாளை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். மிகவும் எளிமையான வாழ்க்கைக்கு பெயர்போனவரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்தியாவில் பல கோடிகளை சம்பளமாக வாங்கும் நடிகர்களின் லிஸ்டில் இவரே டாப்பில் இருக்கின்றார்.

இத்தகைய மனிதர் தற்போதும் மிக சாதாரணமான உடை மற்றும் கார்களில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றார். எனவேதான் இவர் அரசியலுக்கு வந்தால் ஏதேனும் மாற்றம் நிகழும் என அவரது ரசிகர்கள் நினைக்கின்றனர். இம்மாதிரியான சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், அதிக விலைக் கொண்ட கார் ஒன்றுடன் போஸ் கொடுத்த பழைய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகத் தொடங்கியுள்ளது. இதனை கார்டாக் எனும் ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.

ரஜினிக்கு அருகில் கெத்தாக நிற்கும் அந்த கார், லம்போர்கினி நிறுவனத்தின் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த 'உருஸ்' எஸ்யூவி ரக காராகும். இதோட விலை பல கோடிகள் ஆகும். இந்த காரின் அருகில் நின்றவாறு ரஜினிகாந்த் போஸ் கொடுத்த புகைப்படமே தற்போது வைரலாகி வருகின்றது. அப்போது அவருடைய மகள் சௌந்தர்யா மற்றும் பேரன், மருமகன் ஆகியோரும் இருப்பதைப் புகைப்படம் காட்டுகின்றது.

இந்த புகைப்படம் ஜூலை மாதத்தின் மத்தியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இக்காரும் மிக சமீபத்தில் வாங்கப்பட்ட காராகும். இக்காரையே ரஜினிகாந்த், கொரோனா பொது முடக்கத்தின்போது சாலையில் வைத்து டெஸ்ட் செய்து பார்த்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் #லையன்இன்லம்போ (#LionInLamborghini) எனும் ஹேஸ்டேக்கில் வைரலாகியது.

அத்துடன், லம்போர்கினி உருஸ் கார் மகள் சௌந்தர்யாவிற்காக வாங்கப்பட்ட கார் என்ற தகவலும் வெளியாகியது. இதனையே தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களும் உறுதிப்படுத்தியுள்ளன. லம்போர்கினி உருஸ், உலக புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்றாக மாறியிருக்கின்றது. இதற்கு இந்திய மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது.

உலகின் மிகவும் ஸ்டைலான மற்றும் சக்திவாய்ந்த கார்களில் இதுவும் ஒன்றாகும். எனவேதான் உலகம் முழுவதிலும் வாகன விற்பனை மந்த நிலையில் இருந்த போதிலும் லம்போர்கினி உருஸ் காருக்கு மட்டும் செல்வந்தர்கள் எக்கசக்கமான வரவேற்பை வழங்கினர். இந்த கார் செயல் திறனில் மட்டுமின்றி சொகுசு வசதிகளிலும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையிில் இருக்கின்றது.

நமது நாட்டில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இக்காரை பயன்படுத்தி வருகின்றனர். இதில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவும் ஒருவர். லம்போர்கினி உருஸ் இந்தியாவில்ல சுமார் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

லம்போர்கினி உருஸ் காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 641 பிஎச்பி பவர் மற்றும் 850 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் வெறும் 3.6 வினாடிகளில் 0த்தில் இருந்து மணிக்கு 100கிமீ எனும் வேகத்தில் செல்ல உதவும். இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 305 கிமீ ஆகும்.


Click it and Unblock the Notifications








