பிஎஸ்4 வாகனங்கள் விற்பனை... டீலர்களுக்கு சோதனை மேல் சோதனை!
பிஎஸ்4 வாகனங்களின் விற்பனைக்கான காலக்கெடு நெருங்கிவிட்ட நிலையில், பல வாகன விற்பனை டீலர்களுக்கு சோதனை மேல் சோதனை ஏற்பட்டு தத்தளித்து வருகின்றனர்.

வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசு உமிழ்வு பிரச்னையை குறைக்கும் விதத்தில், பிஎஸ்6 விதிகள் வரும் 1ந் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றன. பிஎஸ்4 மாசு உமிழ்வு விதியிலிருந்து நேரடியாக பிஎஸ்6 என்ற கடுமையான மாசு உமிழ்வு விதிகளை மத்திய அரசு வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு கொண்டு வர இருக்கிறது.

இதனால், வரும் 31ந் தேதி வரை மட்டுமே பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்ய இயலும். சில மாநிலங்களில் வரும் மார்ச் 25ந் தேதி வரை மட்டுமே பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்படும். எனவே, இருப்பில் உள்ள பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு டீலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதனிடையே, கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போய் உள்ளது. இதனால், டீலர்களில் வாடிக்கையாளர்களின் வருகை வெகுவாக குறைந்து போய்விட்டது. சாதாரண நாட்களைவிட 70 சதவீதம் வரை விற்பனையும், வாடிக்கையாளர்களின் வருகையும் குறைந்து விட்டதாக டீலர் கூட்டமைப்பு தெரிவித்தது.

பல வாகன விற்பனை நிலையங்கள் பணியாளர்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால், ஒருபுறத்தில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வரும் நிலையில், மறுபுறத்தில் டீலர்கள் இரட்டிப்பு இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இருப்பில் தேங்கிவிட்ட பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக பிஎஸ்4 வாகனங்களின் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை வரும் மே மாதம் 31ந் தேதி வரை கூடுதலாக இரண்டு மாதங்கள் நீடித்து தர வேண்டும் என இந்திய வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு (FADA) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, தற்போது உள்ள சூழலில், பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு போதிய அவகாசம் இல்லை. இதனால் டீலர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும்," என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது உள்ள சூழலை மனதில் வைத்து, இந்த மனுவை விசாரித்து உச்சநீதிமன்றம் காலக்கெடுவை நீடித்து தரும் என்று டீலர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், இந்த மனுவை மார்ச் 31ந் தேதிக்குள் அவசர வழக்காக எடுத்துக் கொள்ள இயலாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக கூறி விட்டது.

இதனால், ஏற்கனவே அறிவித்தபடி, வரும் 31ந் தேதியுடன் பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு முடிகிறது. தற்போது கொரோனாவால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் சூழலில், இருப்பில் உள்ள பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதில் டீலர்களுக்கு பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு முதல் காலக்கெடு நீடிப்பு தொடர்பாக வாகன விற்பனையாளர் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதமும் காலக்கெடு நீடித்து தருவதற்கான சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், காலக்கெடு நீடிக்க முடியாது என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








