பிஎஸ்4 வாகன விற்பனையில் தில்லாலங்கடி வேலை செய்த டீலர்கள்.. சாட்டையை சுழற்றிய உச்சநீதிமன்றம்!
பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு வழங்கப்பட்ட சிறப்பு கால அவகாசத்தை டீலர்கள் தவறாக பயன்படுத்தி தில்லாலங்கடியில் ஈடுபட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் கடிந்து கொண்டுள்ளது.

வாகனப் புகையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசு உமிழ்வை குறைக்கும் விதமாக, கடந்த ஏப்ரல் 1 முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்தன. இதனால், குறைவான மாசு உமிழ்வை வெளிப்படுத்தும் பிஎஸ்6 எஞ்சினுடன் வாகனங்களை விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டது.

இந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பிஎஸ்4 எஞ்சின் கொண்ட வாகனங்களை பல நிறுவனங்கள் விற்பனை செய்ய முடியவில்லை. கார் நிறுவனங்களின் யார்டுகளிலும், டீலர்களிலும் பிஎஸ்4 வாகனங்கள் இருப்பில் தேங்கின.

போதாக்குறைக்கு கொரோனாவும் சரியாக வந்து சேர்ந்து கொண்டதால், கார் நிறுவனங்களும், டீலர்களும் இருப்பில் தேங்கிய பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், கொரோனா பிரச்னை மற்றும் வாகன விற்பனை துறையில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலையை காரணம் காட்டி இருப்பில் இருக்கும் பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு இந்திய வாகன விற்பனையாளர்கள் சங்க கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்த மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் லாக்டவுன் முடிவுக்கு வரும்போது இருப்பில் உள்ள 10 சதவீத வாகனங்களை மட்டும் விற்பனை செய்ய அனுமதி வழங்கியது. அதுவும் குறிப்பிட்ட நாட்களில் விற்பனை செய்ய கெடு விதித்தது. மொத்தமாக இருப்பில் இருந்த 1.05 பிஎஸ்4 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த மாதம் ஊரடங்கு விதிகள் தளர்வு கொடுக்கப்பட்டதால், பிஎஸ்-4 வாகனங்களை விற்பனை செய்வதில் டீலர்களும், வாகன நிறுவனங்களும் தீவிரமாக இறங்கினர். இந்த சூழலில், உச்சநீதிமன்றம் வழங்கிய சிறப்பு அனுமதியை பயன்படுத்தி இருப்பில் தேங்கிய 2.55 லட்சம் பிஎஸ்4 வாகனங்களை டீலர்கள் விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, நீதிபதிகள் அப்துல் நஸீர் மற்றும் இந்திரா பானர்ஜி அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு,"வாகன நிறுவனங்களும், டீலர்களும் உச்சநீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டுவிட்டனர்," என்று கடுமையாக கடிந்துள்ளனர்.

மேலும், வரும் வெள்ளிக்கிழமைக்குள் எவ்வளவு வாகனங்கள் விற்பனையும், பதிவும் செய்யப்பட்டுள்ளன என்ற விபரத்தை தாக்கல் செய்யுமாறு இந்திய வாகன விற்பனையாளர் கூட்டமைப்புக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அதேபோன்று, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திடமும், மார்ச் 27ந் தேதிக்கு பின்னர் நாடுமுழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளன பிஎஸ்4 வாகனங்கள் மற்றும் பதிவு குறித்த விபரங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








