குஜராத் சுஸுகி கார் ஆலையின் மில்லியன் சாதனை!
குஜராத்தில் அமைந்துள்ள சுஸுகி கார் ஆலை உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டு சாதனை படைத்துள்ளது. சுஸுகி கார் நிறுவனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த ஆலையின் உற்பத்தி சாதனை குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஜப்பானை சேர்ந்த சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் குஜராத் மாநிலம், ஆமதாபாத் அருகே புதிய கார் ஆலையை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. இந்த கார் ஆலை சுஸுகி நிறுவனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் தனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

அதாவது, ஒப்பந்த அடிப்படையில் இந்த ஆலையில் மாருதி சுஸுகி கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த கார் ஆலையில் கார் உற்பத்தி துவங்கப்பட்டது.

இந்த நிலையில், உற்பத்தி துவங்கப்பட்டு மூன்றரை ஆண்டு காலத்தில் ஒரு மில்லியன் கார்களை உற்பத்தி செய்து இந்த கார் ஆலை புதிய சாதனை படைத்துள்ளது. ஒரு மில்லியன் காராக மாருதி பலேனோ கார் உற்பத்தி பிரிவிலிருந்து வெளிவந்தது.

கடந்த 2017ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த ஆலையில் முதலாவதாக மாருதி பலேனோ கார் உற்பத்தி துவங்கியது. இதைத்தொடர்ந்து, 2018ம் ஆண்டு மாருதி ஸ்விஃப்ட் காரின் உற்பத்தி துவ்கி நடந்து வருகிறது. ஏற்கனவே ஸ்விஃப்ட் கார் மாருதியின் மானேசர் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த ஆலையில் இருந்து வெளிநாடுகளுக்கும் கார் ஏற்றுமதி செய்யும் பணிகளும் துவங்கின. கடந்த 2018-19 நிதி ஆண்டில் மட்டும் 4,10,000 கார்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மாருதி பலேனோ மற்றும் ஸ்விஃப்ட் கார்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விற்பனை தேவைகளை இந்த ஆலையின் மூலமாக மாருதி சுஸுகி மற்றும் சுஸுகி நிறுவனங்கள் கச்சிதமாக பூர்த்தி செய்து வருகின்றன. மேலும், ஹரியானா மாநிலம் குர்கான் மற்றும் மானேசர் ஆலைகளின் உற்பத்தி நெருக்கடியை இந்த ஆலை வெகுவாக குறைத்துள்ளது.

இந்த கார் ஆலையில் 1,800 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கொரோனாவால் பிரச்னைகள் இருந்தாலும், உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி கார் உற்பத்தி பணிகளை தொடர்ந்து நடக்கின்றன.


Click it and Unblock the Notifications








