மாருதி ஜிம்னி எஸ்யூவி உதிரிபாகங்கள் இறக்குமதி... இருந்தும் சந்தோஷப்பட முடியலையே!
மாருதி ஜிம்னி எஸ்யூவியின் உதிரிபாகங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருந்தும் இந்தியர்கள் சந்தோஷப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி கார் நிறுவனத்தின் தாய் நிறுவனமான சுஸுகி உற்பத்தி செய்து வரும் ஜிம்னி எஸ்யூவி ஆஃப்ரோடு சாகசப் பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மாடலாக உள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காம்பேக்ட் எஸ்யூவியாக இருந்தாலும் இதன் ஆளுமையான தோற்றம், சரியான பட்ஜெட், ஆஃப்ரோடு தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவற்றின் மூலமாக தனி வாடிக்கையாளர் வட்டத்தை தக்க வைத்து வருகிறது.

சுஸுகியின் தாய் நாடான ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக டிமான்ட் இருப்பதால், சில நாடுகளில் 12 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவுகிறது. ஜப்பானில் கோசாய் பகுதியில் உள்ள சுஸுகி கார் ஆலையில்தான் இந்த ஜிம்னி எஸ்யூவி உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் சுஸுகி ஜிம்னி எஸ்யூவியின் 3 டோர் மாடல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும், ஆட்டோ எக்ஸ்போவிற்கு வந்த பார்வையாளர்கள் மத்தியில் அதிக ஆர்வமும் இருந்ததை காண முடிந்ததாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்தது.

தற்போது விற்பனையில் உள்ள மாருதி ஜிப்ஸி எஸ்யூவிக்கு மாற்றாக இந்த புதிய ஜிம்னி எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. எனினும், இந்தியாவுக்கு 5 டோர் மாடல்தான் சரிபட்டு வரும் என்று முடிவு செய்யப்பட்டதால், இந்த எஸ்யூவியின் அறிமுகம் தள்ளிப்போவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த சூழலில், ஜிம்னி எஸ்யூவியின் முக்கிய பாகங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதாக டீம் பிஎச்பி வாயிலாக தகவல் கசிந்துள்ளது. குஜராத்தில் உள்ள சுஸுகி நிறுவனத்தின் நேரடி ஆலையில் இந்த புதிய ஜிம்னி எஸ்யூவிகளை உற்பத்தி செய்வதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

குஜராத் ஆலையில் உற்பத்தி துவங்கினாலும் உடனடியாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்பு இல்லை. ஜப்பான் ஆலையில் உற்பத்தி திறனில் உள்ள சிக்கலையடுத்து, குஜராத் ஆலையில் இருந்து உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சுஸுகி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்தியாவில் 5 டோர் மாடல் உருவாக்கப் பணிகள் முடிந்த பின்னரே எதிர்பார்க்கப்படும்.


Click it and Unblock the Notifications








