சுஸுகி ஜிம்னி எஸ்யூவி உற்பத்தி இந்தியாவில் துவங்கியது... இருந்தும் நம்மால சந்தோஷப்பட முடியலையே!
சுஸுகி ஜிம்னி எஸ்யூவியின் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், இந்தியர்களுக்கு இன்னும் எட்டாக்கனி நிலையில்தான் இந்த எஸ்யூவி உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

சுஸுகி ஜிம்னி எஸ்யூவிக்கு உலகின் பல்வேறு நாடுகளில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. எங்கு அறிமுகம் செய்தாலும், அங்கு புக்கிங் அள்ளுகிறது. இதனால், உற்பத்தியை விட தேவை அதிகமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவிலும் சுஸுகி ஜிம்னி எஸ்யூவிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் சுஸுகி ஜிம்னி எஸ்யூவி பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.

கொரோனா பிரச்னை காரணமாக, சுஸுகி ஜிம்னி எஸ்யூவியின் இந்திய அறிமுகம் சற்று தள்ளிப் போடப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த நிவலையில், அடுத்த ஆண்டு சுஸுகி ஜிம்னி எஸ்யூவி மாருதி பிராண்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஜிம்னி எஸ்யூவி ஜப்பானில் உள்ள சுஸுகி ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜிம்னி எஸ்யூவி உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றுவதற்கு சுஸுகி திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியானது. அதாவது, இந்திய சந்தைக்கு மட்டுமின்றி, உலகின் அனைத்து நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து சுஸுகி ஜிம்னி எஸ்யூவியை ஏற்றுமதி செய்வதற்கான திட்டத்தை சுஸுகி எடுத்துள்ளது.

இந்த நிலையில், சுஸுகி ஜிம்னி எஸ்யூவியின் உற்பத்தி மாருதி சுஸுகி நிறுவனத்தின் குர்கான் ஆலையில் துவங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காடிவாடி தளத்தில் இதற்கான சுஸுகி ஜிம்னி எஸ்யூவி குர்கான் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஸ்பை படங்களும் வெளியாகி இருக்கின்றன.

அதேநேரத்தில், தற்போது குர்கான் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஜிம்னி எஸ்யூவி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது என்று அந்த செய்தி தெரிவிக்கிறது. எனவே, இந்தியாவில் உடனடியாக வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் பட்ஜெட் விலை கொண்ட ஆஃப்ரோடு எஸ்யூவியாக சுஸுகி ஜிம்னி விற்பனையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, ஜிம்னிக்கு அனைத்து நாடுகளிலும் சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது.

அதேநேரத்தில், 3 டோர் மாடல்தான் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. இந்த மாடல் இந்தியாவுக்கு சரியாக இருக்காது என்று மாருதி நிறுவனம் கருதுகிறது. 5 டோர் மாடலில் வந்தால் மட்டுமே இந்தியாவில் எடுபடும் என்பதும் தாமதத்திற்கு காரணமாகி இருக்கிறது.

பெட்டி போன்ற டிசைன் அமைப்பு, அதிக க்ரவுண்ட் க்ளியரன்ஸ், 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்போது 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் எஞ்சின் தேர்வு இடம்பெறும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இந்த எஸ்யூவியில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications







