இந்தியாவின் முதல் சூரிய-சக்தி ஆட்டோ... தமிழகத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து மாஸ் காட்டிய முதல்வர்!
இந்தியாவின் முதல் சூரிய சக்தி மூலம் இயங்கும் ஆட்டோ நம் தமிழகத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகம் முழுவதும் தற்சமயம் நிலவும் அசாதாரண சூழ்நிலையை பற்றி நான் கூற வேண்டிய அவசியமில்லை. கொரோனா வைரஸினால் பல உயிர்கள் பலியாகி கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் தான் சில உயிர்களையாவது காப்பாற்ற முடியும் என்பதை அரசாங்கம் நன்கு அறிந்திருக்கிறது.

ஆனால் இந்தியாவில் நகர்புறங்களில் உள்ள சில குறுகிய சாலைகளில் ஆம்புலன்ஸ் செல்வது இப்போதும் இயலாத காரியமாகவே உள்ளது. இதனை மனதில் வைத்துதான் தமிழ்நாட்டை சேர்ந்த எம் ஆட்டோ க்ரூப் என்ற நிறுவனம் சூரிய ஆற்றலில் இயங்கக்கூடிய 13 விதமான எலக்ட்ரிக் ஆட்டோகளை அறிமுகம் செய்துள்ளது.

ஆம்புலன்ஸிற்கு இணையான மருத்துவ வசதிகளை நிரப்பும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ள இவை, ஆம்புலன்ஸால் செல்ல இயலாத சாலைகளிலும் எளிதாக இயங்கும். இவ்வாறான எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தமிழக அரசு எப்போதுமே முக்கியத்துவம் அளிக்கும்.

இந்த வகையில் தான் இன்று (செப்டம்பர் 22) தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இருந்து இந்த சூரிய சக்தி ஆட்டோக்களை பச்சை கொடி அசைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் நவீன தொழிற்நுட்பங்கள் நிறைந்த முதலீடுகளை ஈர்த்திட, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் கடந்த ஆண்டு அரசு முறை பயணம் மேற்கொண்டு 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, சுமார் 35,520-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.

இப்பயணத்தின்போது, துபாயில் நடைபெற்ற முதலீட்டாளர் சந்திப்பில், பெட்ரோல் ஆட்டோக்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார ஆட்டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தற்போது, எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனம், 140 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் 13 வடிவங்களிலான புதிய ஆட்டோக்களை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்புதிய ஆட்டோக்களை முதல்வர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஆட்டோக்களில், சிசிடிவி கேமிரா, ஜிபிஎஸ் வசதி, ஆபத்து பொத்தான், டாப் (TAB) போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எம் எலக்ட்ரிக் ஆட்டோக்களின் ஓட்டுநர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், தனியார் குழுமத்தின் தலைவர் மன்சூர் அலிகான், நிர்வாக இயக்குநர் யாஸ்மின் ஜவஹர் அலி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம் ஆட்டோ க்ரூப்பின் சேர்மன் மன்சூர் அலிகான் பிரபல செய்திதளத்திற்கு அளித்த பேட்டியில், நெடுஞ்சாலைக்கு 2கிமீ தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலையை கொண்ட நகரத்தை சேர்ந்தவன் நான். பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல வேண்மென்றால் குறைந்தது 2கிமீ தூரமாவது நடக்க வேண்டும். எனது தந்தை ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததினால் உயிர் இழந்தார். ஆனால் அத்தகைய பகுதிகளை இந்த எம்-ஆம்புலன்ஸ் எளிதாக சென்றடையும் என கூறினார்.


Click it and Unblock the Notifications








