அறிமுகத்திற்கு முன்பே மக்கள் மனதை கவர்ந்த டாடா அல்ட்ராஸ்... திரைப்பட டீசர்களை தெறிக்கவிடும் வீடியோ..
விரைவில் அறிமுகமாகவுள்ள டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் கார் சந்தைக்கு வருவதற்கு முன்னரே டீசர்மூலம் மக்கள் மனதைக் கொள்ளைச் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பொதுவாக ஒரு திரைப்படம் வெளிவர இருக்குமானால் அதனை மக்கள் கொண்டு சேர்க்கும் விதமாக போஸ்டர்கள், விளம்பரங்கள், டீசர்கள் வெளியிடப்படுவது வழக்கம்.
இதேபாணியை தற்போது வாகன உற்பத்தி நிறுவனங்களும் கையாண்டு வருகின்றது.

முன்னதாக டிவி விளம்பரங்களை வெளியிட்டு வந்த வாகன உற்பத்தி நிறுவனங்கள், தற்போது இணைய வாசிகளைக் கவர்கின்ற வகையில் சமூக வலைதளங்களை குறிவைத்து தங்களின் புதிய வாகனங்களைப் பற்றிய வீடியோ டீசர்களை வெளியிட்டு வருகின்றன.
இதற்கு தற்காலத்து இளைஞர்களக்கு இணையத்தின்மீதுள்ள மோகமே முக்கிய காரணம்.

இந்நிலையில், இந்திய வாகன உலகின் ஜாம்பவானான டாடா விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள புத்தம் புதிய அல்ட்ராஸ் காரின் டீசரை வெளியிட்டுள்ளது.
டாடா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு எப்பவுமே தனித்துவமான வரவேற்பு இந்தியாவில் நிலவுவது அனைவரும் அறிந்த ஒன்றே. அந்தவகையில், புதிதாக அறிமுகமாக காத்திருக்கும் அல்ட்ராஸ் மீதும் தற்போது அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

இந்த நிலையிலேயே டாடா நிறுவனம் இந்த கார்குறித்த டீசரை வெளியிட்டு போட்டி நிறுவனங்களை கதி கலங்க வைத்துள்ளது.
பிரிமியம் ஹேட்ச்பேக் மாடலாக தாயார் செய்யப்பட்டுள்ள இந்த காரை டாடா நிறுவனம் பொங்களுக்கு பின்னர் 22ம் தேதி லாஞ்ச் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவலை உறுதிச் செய்யும் வகையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில்கூட தேதி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, காரின் அனைத்து பக்கங்களும் இந்த டீசர் வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த கார் அடுத்த தலைமுறை கவர்கின்ற ஸ்டைலில் களமிறங்கும் என்பது உறுதியாகியுள்ளது. இதற்காக டாடா நிறுவனம், ஆல்ஃபா கட்டமைப்புக் கொள்கையைப் பயன்படுத்தியுள்ளது.

டாடாவின் இந்த புதிய தயாரிப்பு ஏற்கனவே சந்தையில் உள்ள மாருதி சுஸூகி பலினோ, ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட மாடல்களுக்குப் போட்டியளிக்க உள்ளது.

மேலும், விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த காருக்கான புக்கிங்கைக்கூட டாடா நிறுவனம் அதன் ஆன்லைன் தளம் மற்றும் டீலர்கள் வாயிலாக கடந்த வாரமே தொடங்கிவிட்டது. அவ்வாறு, ரூ. 21 ஆயிரம் என்ற முன்தொகையில் இந்த காருக்கான முன்பதிவு தற்போது செய்யப்பட்டு வருகின்றது.
தொடர்ந்து, 22ம் தேதிக்கு பின்னர் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு இந்த டெலிவரி செய்யப்பட உள்ளது. இதற்கான பணியில் டாடா நிறுவனம் தற்போது தீவிரம் காட்டி வருகின்றது.

ஏற்கனவே நாம் கூறியதைப் போன்று ஆல்ஃபா கட்டமைப்புக் கொள்கையின்மூலம் உருவாகியுள்ள இந்த கார் நவீன தொழில்நுட்பம் மற்றும் இலகு ரக எடையுடன் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்காகவே, டாடா நிறுவனம் ஆல்ஃபா பிளாட்பாரத்தில் இந்த காரை உருவாக்கியுள்ளது.

மேலும், இதன் நவீன தொழில்நுட்ப வசதிக்காக இம்பேக்ட் 2.0 என்ற வடிவமைப்புக் கொள்கையையும் டாடா பயன்படுத்தியுள்ளது. ஆகையால், மிகச்சிறந்த மற்றும் கவர்ச்சிகரமான அம்சங்களை இந்த கார் பெற்றிருக்கின்றது. தற்போது பயன்படுத்தப்பட்டுள்ள இதே தொழில்நுட்பத்தில்தான் டாடாவின் எதிர்கால வாகனங்கள் உற்பத்திச் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

புதிய டாடா அல்ட்ராஸ் காரில் பிரிமியம் வசதிகளாக எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பின்பக்க மின் விளக்குகள், 16 இன்சிலான டைமண்ட் கட் அலாய் வீல்கள், இடைநிலை டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 7 இன்சிலான டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
இந்த டச் ஸ்கிரீன்மூலம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு செயலி ஆகியவற்றை பயன்படுத்த முடியும்.

இந்த காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி, 90 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்விலும் அல்ட்ராஸ் கிடைக்க இருக்கின்றது.
தொடர்ந்து, இது மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே முதலில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விலைகுறித்த தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications








