கார்களுக்கான இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி காலம்... நல்ல முடிவு எடுத்த டாடா!
கார்களுக்கான இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி காலத்தை நீடித்து அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ். கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் உலகையே முடக்கி வைத்துள்ளது. அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து, பிற அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுவிட்டன. இதனால், உலகமே ஸ்தம்பித்து போய் நிற்கிறது. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி காலத்தை நீடித்து அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, டீலர்களுக்கு டாடா மோட்டார்ஸ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை டீம் பிஎச்பி தளம் மூலமாக வெளிவந்துள்ளது. அதில், குறிப்பிடத்தக்க முடிவு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், மார்ச் 15 முதல் மே 31 வரை கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு வழங்கப்படும் இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி காலத்தை ஜூலை மாத இறுதி வரை நீடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்களின் வாடிக்கையாளர்கள் கொரோனா தாக்கம் குறைந்தவுடன், தங்களுக்கு வாகனம் வாங்கப்பட்டபோது வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது சிறந்த விதி தளர்வாக இருக்கும். மேலும், இந்த முடிவை எடுத்துள்ள முதல் நிறுவனமாகவும் கருதப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு இதன் மூலமாக ஏற்பட இருந்த இழப்புகளும் தவிர்க்கப்படும்.

மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கொரோனா வைரஸ் பாதிப்பால், தனது ஆலைகளில் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும், டீலர்கள் மற்றும் சர்வீஸ் மையங்களிலும் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. டெஸ்ட் டிரைவ் மற்றும் டெலிவிரி பணிகளும் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த முடிவை டாடா மோட்டார்ஸ் எடுத்து இருப்பது வரவேற்கத்தக்க விஷயமாகவே பார்க்கலாம். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பின்பற்றி இதர நிறுவனங்களும் இதே போன்ற முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, அரசுக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதற்கு வாகன நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. மருத்துவ துறையினருக்கு தேவைப்படும, மாஸ்க் மற்றும் வென்டிலேட்டர் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்வதற்கு அந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








