சென்னை -பெங்களூர் நெடுஞ்சாலையில் டாடா கிராவிட்டாஸ் சோதனை ஓட்டம்...
அறிமுகத்திற்கு முன்னதாக டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி கார் மீண்டும் ஒரு முறை சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்லேன் செய்தி தளம் வெளியிட்டுள்ள இந்த சோதனை ஓட்ட படங்களின் மூலம் வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஊரடங்கில் சிறு தளர்வு கொண்டுவரப்பட்ட பிறகு தனது சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள கிராவிட்டாஸ் மாடல் முழுவதும் மறைக்கப்பட்டு உள்ளதால் காரை பற்றி பெரிய அளவில் எந்த தகவலையும் அறிய முடியவில்லை.

இருப்பினும் இந்த சோதனை கிராவிட்டாஸ் மாடலில் சிறிய அளவில் 15 இன்ச்சில் 6-ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. ஆனால் இந்த சிறிய ஸ்போக் சக்கரத்தை நிச்சயம் விற்பனைக்கு வரும் பெரிய தோற்றத்தை கொண்ட கிராவிட்டாஸ் எஸ்யூவியில் எதிர்பார்க்க முடியாது.

இந்த வருடத்தின் முதல் பாதியில் எதிர்பார்க்கப்பட்ட கிராவிட்டாஸ் எஸ்யூவி காரின் அறிமுகம் மற்ற மாடல்களின் அறிமுகங்களை போல் கொரோனா வைரஸினால் தாமதமாகியுள்ளது. இதனால் டாடா நிறுவனம் இந்த புதிய மூன்று இருக்கை வரிசை எஸ்யூவி காரை இந்த வருடத்தின் பண்டிக்கை காலத்தில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த எஸ்யூவி மாடல் 7 இருக்கைகளுடன் ஹெரியர் எஸ்யூவி காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெரும்பான்மையான டிசைன், தொழிற்நுட்ப அம்சங்கள், என்ஜின் அமைப்பு உள்ளிட்டவற்றை இந்த கார் ஹெரியரில் இருந்து பெற்றுள்ளது.

டிசைன் அமைப்பை பொறுத்தவரையில், கிராவிட்டாஸ் கார் முன்புறத்தில் ஹெரியரில் உள்ளதை போன்ற பிளவுப்பட்ட ஹெட்லேம்ப் செட்அப்பை கொண்டுள்ளது. ஆனால் ஹெரியர் மாடலின் ஸ்வூப்பிங் ரூஃப்-லைனில் இருந்து திருத்தியமைக்கப்பட்ட பின்புறத்தை இந்த புதிய எஸ்யூவி கார் பெற்றுள்ளது.
இந்த மாறுப்பட்ட பின்புற வடிவ அமைப்பு மூன்றாம் இருக்கை வரிசைக்கு கூடுதலான இடத்தை வழங்குவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உட்புற கேபினும் ஹெரியரில் உள்ளதை விட 62மிமீ பெரியதாக உள்ளது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு கிராவிட்டாஸ் எஸ்யூவி மாடலில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 2.0 லிட்டர், 4-சிலிண்டர், க்ரேயோட்டிக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

ஹெரியர் எஸ்யூவி மாடலிலும் வழங்கப்பட்டுள்ள இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆனால் இந்த என்ஜின் கிராவிட்டாஸ் மாடலில் சற்று வித்தியாசமான ட்யூன் உடன் பொருத்தப்படும் என தெரிகிறது. இதனுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதன் விலையை அதிகமாக நிர்ணயிக்க முடிவு செய்திருக்கிறது. இதனால் அறிமுகத்திற்கு பிறகு இந்த எஸ்யூவி கார் நேரடியாக மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மாடல்களுடன் போட்டியிடவுள்ளது.


Click it and Unblock the Notifications








