மஹாராஷ்டிரா முதலமைச்சர் கான்வாயில் பைலட் வாகனமாக மாறிய ஹாரியர்... இதைவிட வேறென்னங்க பெருமை இருக்கு!
இந்திய தயாரிப்புகளில் ஒன்றான டாடா நிறுவனத்தின் ஹாரியர் காருக்கு பெறுமை சேர்க்கும் விதமாக ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் அதளபாதாளத்தில் வீழ்ந்திருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக உள்ளூர் தயாரிப்பு பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

அதாவது, வெளிநாட்டு தயாரிப்பு அல்லாத பொருட்களை (இறக்குமதி பொருட்கள்) அதிகளவில் பயன்படுத்த நாட்டு மக்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அரசின் இந்த யுக்தியை இந்திய அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பொறுப்பில் இருக்கும் அரசு பணியாளர்கள் எத்தனை பேர் பின்பற்றுகின்றனர்? என்ற கேள்வி பலருக்கு எழும்பியது.

இதனடிப்படையில் அண்மையில் பிரதமர் மோடி பயன்படுத்தும் உள்ளூர் தயாரிப்பு வாகனங்களைப் பற்றிய தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியது. அதில், உள்நாட்டு தயாரிப்புகளைக் காட்டிலும் வெளிநாட்டு வாகனங்கள் பல இருப்பது தெரியவந்தது.

அதேசமயம், மஹிந்திரா எக்ஸ்யூவி 500, மஹிந்திரா ஸ்கார்பியோ, டாடா ஹாரியர் மற்றும் மாருதி சியாஸ் ஆகிய கார்களை அவர் பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மோடி மட்டுமல்லாது வேறு சில அரசியல்வாதிகளும் உள்ளூர் தயாரிப்புகளைப் பயன்படுத்துவது பற்றிய தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது.

அந்தவகையில், மஹாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சரான உத்தவ் தாக்கரே, டாடா நிறுவனத்தின் ஹாரியர் எஸ்யூவி ரக கார்களைப் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர், அம்மாநிலத்தின் 19வது முதலமைச்சர் ஆவார்.

அவரின் கான்வாயை வழிநடத்தும் வாகனமாக கருப்பு நிற ஹாரியர் எஸ்யூவி கார் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதுபோன்று மேலும் இரு ஹாரியர் கருப்பு நிற கார்கள் அவரது கான்வாயில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவையனைத்தும் எக்ஸ்இ எனப்படும் உயர்நிலை வேரியண்டுகள் என கூறப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் விதமான வீடியோக்கள் சில தற்போது இணையத்தில் வலம் வர தொடங்கியிருக்கின்றன.

அதில், டாடா ஹாரியர் மட்டுமின்றி இந்திய தயாரிப்புகளான மஹிந்திரா டியுவி300 மற்றும் எக்ஸ்யூவி 500 ஆகிய கார்கள் இடம்பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. இவையனைத்தும், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ வாகனங்கள் ஆகும்.

இந்த உள்நாட்டு தயாரிப்புகளுடன் வெளிநாட்டு உற்பத்திகளான லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ உள்ளிட்ட கார்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரையே முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பெரும்பாலான பயணங்களுக்கு பயன்படுத்தப்படுவாத தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற வாகனங்கள் பாதுகாப்பு பணியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதில், டாடா ஹாரியர் எஸ்யூவி கார்களின் மூன்று யூனிட்டுகள் பயன்படுத்தியிருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்திய தயாரிப்புகளுக்கு சிறந்த அங்கீகாரத்தை வழங்கியதைப் போன்று இந்த சம்பவம் அமைந்துள்ளது.
டாடா ஹாரியர், இளம் தலைமுறையினர்களுக்கு ஏற்ற டிசைன் தாத்பரியங்களுடன் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.

அக்காரை கடந்த ஆண்டின் இறுதியில்தான் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. இதன் பவர்ஃபுல் எஞ்ஜின் திறன் மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகள் நல்ல வரவேற்பைப் பெற காரணமாக இருக்கின்றது.
இதனை ஆடம்பர கார்களான லேண்ட் ரோவர் வாகனங்களைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒமேகா-ஆர்க் எனும் பிளாட்பாரத்தில் வைத்து டாடா தயாரித்து வருவது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் மிட்-சைஸ் எஸ்யூவி காராகும்.
இந்த காரில் 2.0 லிட்டர் டீச் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது, அதிகபட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளிப்படுத்த உதவும். இது புதுப்பிக்கப்பட்ட மாடலின் திறனாகும். இதன் முந்தைய மாடல் 20 பிஎஸ் அளவு குறைந்த திறனையே வெளிப்படுத்துகின்றது.

இதுமட்டுமின்றி, தற்போதைய புதுப்பிக்கப்பட்ட மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் கிடைக்கின்றது. இத்துடன், பனோரமிக் சன்ரூஃப், சொகுசு இருக்கை, கவர்ச்சியான இன்டீரியர் அமைப்பு என பிரிமியம் வசதிகள் பல வழங்கப்பட்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








