டாடா நிறுவனத்தின் மினி எஸ்யூவி எப்போது அறிமுகம்? - வெளியானது புதிய தகவல்!
வாடிக்கையாளர் மத்தியில் நீண்ட காலமாக அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய மினி எஸ்யூவி எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய கார்கள் மூலமாக சந்தையில் மிக முக்கிய இடத்தை நோக்கி முன்னேறி வருகிறது. குறிப்பாக, அந்நிறுவனத்தின் டாடா டியாகோ, டிகோர், அல்ட்ராஸ், நெக்ஸான், ஹாரியர் உள்ளிட்ட மாடல்களுக்கு அமோக வரவேற்பு இருந்து வருகிறது. மேலும், ஹாரியர் அடிப்படையிலான 7 சீட்டர் மாடலும் வரும் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த மாடல்கள் டிசைன் மற்றும் சிறப்பம்சங்களில் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விலையும் மிக சரியாக இருப்பதால், அதிக ஆதரவு உள்ளது. சந்தையில் தனது ஆதிக்கத்தை மெல்ல அதிகரித்து வரும் டாடா மோட்டார்ஸ், அடுத்து தனது சந்தையை வலுப்படுத்தும் விதத்தில் மினி எஸ்யூவி மாடலை விரைவில் கொண்டு வர இருக்கிறது.

இந்த நிலையில், இந்த புதிய மினி எஸ்யூவி வரும் ஆண்டு மே மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக டீம் பிஎச்பி தளம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மினி எஸ்யூவி மாடல் ஹார்ன்பில் (H2X) கான்செப்ட் எஸ்யூவி மாடல் அடிப்படையில் தயாரிப்பு நிலை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. மிக குறைவான பட்ஜெட்டில் அதிக வசதிகளுடன் வர இருக்கும் இந்த புதிய மினி எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த புதிய மாடல் 4 மீட்டர் நீளத்திற்குள் உருவாக்கப்பட்டு இருக்கும். டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டு இருக்கும். எல்இடி பகல்நேர விளக்குகள், பம்பர் அமைப்பில் ஹெட்லைட்டுகள், கோள வடிவிலான டெயில் லைட்டுகள், Y வடிவிலான பிரேக் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன.

புதிய டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவியில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் எதிர்பார்க்கலாம். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். ரூ.5.5 லட்சம் பட்ஜெட்டில் இந்த புதிய மினி எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








