ரகசியத்தை உடைத்த டாடா... கார்களை பராமரிக்க இதைதான் செய்கிறோம்... நீங்களும் இனி கடைபிடிக்கலாம்!
டாடா நிறுவனம், அதன் ஆரம்பநிலை முதல் உயர்நிலை வரையிலான கார்களை பராமரிப்பதற்கான அறிவுரையை வழங்கியிருக்கின்றது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஒரு மாதங்களையும் கடந்து ஊரடங்கு உத்தரவு நீடித்து வருகின்றது. விரைவில் இந்த தடையுத்தரவு இரு மாதங்கள் என்ற இலக்கைத் தொட இருக்கின்றது.
உலக வரலாற்றிலேயே இல்லாத அளவில் உலக நாடுகள் பலவும் இதேபோன்றதொரு இக்கட்டான சூழ்நிலையில்தான் தற்போது சிக்கித் தவித்து வருகின்றன.

குறிப்பாக, வைரஸ் தொற்று சமூக பரவலை ஏற்படுத்தாத வண்ணம் இருப்பதற்காக இந்த ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் தேசிய அளவில் அமல்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனால், நாட்டின் அனைத்து மாநிலங்களும் அதன் முக்கிய நகரங்களை மட்டுமின்றி அண்டை மாநிலங்களை இணைக்கும் எல்லைப் பகுதிகளையும் சேர்த்தே அடைத்திருக்கின்றன.

குறிப்பாக, அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களைத் தவிர வேறெந்த வாகனங்களுக்கும் அவை அனுமதி வழங்குவதில்லை. இதுபோன்ற பல காரணங்களால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவில் லேசான தளர்வு வழங்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்கும் சூழ்நிலையே தற்போதும் காணப்படுகின்றது. இதனால், அவர்களின் வாகனங்கள் சாலையில் அனாதையாக கைவிடப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு, வாகனங்களை இயக்கமற்று நிறுத்துவது ஓரிரு நாட்களுக்கும் வேண்டுமானால் எந்தவொரு பின் விளைவுகளையும் ஏற்படுத்தாமல் இருக்கும். ஆனால், இப்போதைய சூழ்நிலை வெகுநாட்களாக வாகனங்களை நிறுத்தி வைக்கும் நிலைக்கு தள்ளியிருக்கின்றது.

இது வாகனங்களை லேசாக பாதிக்கச் செய்யலாம். எனவே, இம்மாதிரியான சூழ்நிலையில் இருந்து வாகனங்களை எவ்வாறு காக்க வேண்டும் என்பதுகுறித்த பிரத்யேக தகவலை டாடா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

பொதுவாக சர்வீஸ் மையங்களுக்கு வரும் வாகனங்கள் மீது செய்யப்படும் பராமரிப்புகுறித்த சிறப்பு தகவலைதான் டாடா தற்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கின்றது. வாருங்கள் அதுகுறித்த தகவலை காணலாம்.

இதன் தகவலின் மூலம் டாடா நிறுவனம், முதலில் பேட்டரிகளை சார்ஜ் செய்ய அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில் மிக நீண்ட காலமாக கார்கள் பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டிருப்பதால் பேட்டரியில் இருந்த மின்சார திறன் குறைந்திருக்கும். எனவே, காரை நாம் ஸ்டார்ட் செய்யும்போது அது எளிதில் ஆனாகிவிடாது. மேலும், நாம் தொடர்ச்சியாக ஸ்டார்ட் செய்ய முயற்சிக்கும் அது கூடுதலாக பேட்டரியை வற்றிப்போகச் செய்யும்.

ஆகையால், மிக நீண்ட நாட்கள் கழித்து காரை வெளியில் எடுப்பவராக இருந்தால் அதனை சார்ஜ் செய்த பின்னரே ஸ்டார்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் அது எந்தவொரு சிக்கலுமின்றி ஆன் ஆகும். அதாவது ஸ்டார்டிங் டிரபிள் இல்லாமல் ஸ்டார்ட் ஆகும்.

இந்த செயல்முறையை தவிர்க்க வேண்டுமானால் குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது காரை ஸ்டார்ட் செய்து, சிறிது நேரம் எஞ்ஜினை இயக்க வேண்டும் எனவும் டாடா அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு, எஞ்ஜினை இயக்குவதன்மூலம் காரின் பேட்டரிக்கு தேவையான மின் சக்தி கிடைத்துவிடும். எனவே, நீண்ட நாட்கள் கார் வெளியே செல்ல பயன்படுத்தப்படாமல் இருந்தாலும் அதன் வழக்கமான இயக்கத்தில் எந்தவொரு மாறுபாடும் இருக்காது.

அடுத்ததாக காரை பார்க்கிங் செய்வதிலும் அதிகம் கவனம் தேவை என்கிறது டாடா. சாலையின் ஏதேவொரு மூலையில் பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை நிறுத்துவதால் விலங்குகளின் கூடாரமாக அது மாறிவிடலாம். எனவே, கார்களை வீடுகளுக்கு அருகே பார்க்கிங் ஏரியாவில் அல்லது கண் பார்வை படும்படியான இடத்தில் நிறுத்தி வைக்க அது அறிவுறுத்தியுள்ளது.

அதேசமயம், பலரது இல்லத்தில் பார்க்கிங் வசதி இல்லாததை நாங்கள் உணர்வோம். எனவே, உங்கள் வாகனம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்தால், அதனை முறையான வாகன கவர் கொண்டு முழுமையாக போர்த்தி வைக்க வேண்டும். குறிப்பாக எக்சாஸ்ட் சிஸ்டத்தின் வெளியேற்றத்தின் ஊடாக சிறு விலங்குகள் எதுவும் புகுந்துவிடாத வண்ணம் அதனைக் கவர் செய்ய வேண்டும்.
தொடர்ந்து, காரை பயன்படுத்த ஆரம்பிக்கும் முன்பு அனைத்து தேவையற்ற கவர்களும் நீக்கப்பட்டுவிட்டாத என ஆராய்ந்து அறிந்த பின்னர், காரை வெளியேற்றலாம்.

இதைத்தொடர்ந்து, நீண்ட நாள் கழித்து வாகனத்தை வெளியேற்றும்போது காரின் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் வேலை செய்கின்றதா என்பதை ஒரு ஆராய்ந்து பார்க்க டாடா கூறுகின்றது. முக்கியமாக பிரேக்கிங் அம்சம் மற்றும் பார்க்கிங் பிரேக் உள்ளிட்டவை துள்ளியமாக வேலை செய்கிறதா என்பதை கூடுதல் கவனத்துடன் ஆராய அது அறிவுருத்தியுள்ளது.

அதேசமயம், தற்போதுவரை லாக் டவுண் நீடித்து வருவதால் வாகனங்களை பலர் இப்போதும் வாகனங்களை பார்க் செய்ய சரியான இடத்தை தேடி வருகின்றனர். அவ்வாறு, வாகனத்தைக் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தும் முன்னர் பார்க்கிங் பிரேக்க இயக்கத்தில் வைத்தவாறு இருப்பது கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யும். இது வாகனத்தை சரிவான பகுதியில் நழுவி செல்லாமல் தடுக்கும்.

மேலும், கூடுதலாக டயர்கள் இயங்காத வண்ணம் ஏதேனும் தடுப்புகளைப் பயன்படுத்தவும் டாடா கூறுகின்றது. அதேசமயம், வெகு நாட்களுக்கு கார்களை நிறுத்தி வைத்தே இருப்பதால் பார்கிங் பிரேக்குகள் ஜாம் ஆகவிடலாம். அதிலும், கூடுதல் கவனம் தேவை என்கிறது டாடா. எனவே, நிச்சயம் வாரத்திற்கு இரு முறை அல்லது ஒரு முறையாவது காரை ஆன் செய்து, எஞ்ஜின் இயக்கத்தைக் கவனிப்பது கூடுதல் சிறப்பானது என கூறப்படுகின்றது.

மேலும், ப்யூவல் டேங்கில் அதிகளவு எரிபொருள் நிரப்புவதைத் தவிர்க்கவுமாறு கூறப்பட்டுள்ளது. இது எஞ்ஜின் அடைப்பு உள்ளிட்டவற்றிற்கு வழி வகுக்கும். இதேபோன்று, காரை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரும்போது சிறிது நேரத்திற்கு காரை ஆன் செய்துவிட்டு, எஞ்ஜின் இயக்கத்தை உறுதி செய்த பின்னர் உபயோகிக்க வேண்டும். மேலும், முன்-பின் என காரை இயக்கி பிரேக் உள்ளிட்டவற்றை செக் செய்வதும் அவசியம்.

இவ்வாறு நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அவ்வப்போது ஆராய்வதின் மூலம் திடீர் தேவைகளின்போது எந்தவொரு இடையூறையும் சந்திக்காமல், நம்மால் காரை பயன்படுத்த முடியும். இதேமாதிரியான யுக்திகளைதான் வாகன நிறுவனங்கள் கராஜில் நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்கள்மீது செய்கின்றன. இது யுக்தி தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் என்ற நோக்கில் டாடா இதனை வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








