ராணுவ டிரக்குகளை சப்ளை செய்ய தாய்லாந்து அரசிடம் இருந்து டாடா நிறுவனத்திற்கு 'பல்க்' ஆர்டர்!
தாய்லாந்து நாட்டுக்கு ராணுவ டிரக்குகளை சப்ளை செய்வதற்கான 'பல்க்' ஆர்டரை டாடா மோட்டார்ஸ் பெற்றுள்ளது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. சிறிய வர்த்தக வாகனங்கள், கார், கனரக வாகனங்கள், ராணுவ வாகனங்கள் என அனைத்து விதமான நான்கு சக்கர வாகனங்களையும் டாடா மோட்டார்ஸ் உற்பத்தி செய்து வருகிறது.

இந்த நிலையில், ராணுவ வாகனங்கள் தயாரிப்பிலும் டாடா மோட்டார்ஸ் சிறந்து விளங்குகிறது. நம் நாட்டு ராணுவ பயன்பாட்டிற்காக பல்வேறு வகையான வாகனங்களை தயாரித்து வழங்கி வருகிறது. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் ராணுவ வாகனங்களுக்கு சர்வதேச அளவிலும் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், தாய்லாந்து நாட்டு ராணுவத்திற்கு அதிக எண்ணிக்கையில் ராணுவ டிரக்குகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சப்ளை செய்ய இருக்கிறது. இதற்கான விற்பனை ஒப்பந்த நடைமுறைகள் நிறைவு பெற்றுள்ளதாக இந்தியாவுக்கான தாய்லாந்து தூதர் சுன்டின்டர் சாம் கோங்சக்தி தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பகிர்ந்துள்ள செய்தியில், "600 டாடா எல்பிடிஏ ராணுவ டிரக்குகளை வாங்குவதற்கான ஒப்பந்த நடைமுறைகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த டிரக்குகள் மிகவும் வலிமையானது என்பதுடன் பராமரிக்க எளிதானது. ராணுவ பயன்பாட்டிற்கும், நாட்டின் பாதுகாப்பு சேவைக்கும் மிக உகந்ததாக இருக்கும்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த 600 டிரக்குகளும் தாய்லாந்து ராணுவத்தின் பல்வேறு விதமான பயன்பாட்டிற்கு சேவைக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. டாடா எல்பிடிஏ டிரக்குகள் கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு இந்திய ராணுவ பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த டிரக்குகளில் சில மாடல்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து உற்பத்தி உரிமம் பெற்று பொதுத் துறை நிறுவனமான BEML தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

டாடா எல்பிடிஏ ராணுவ டிரக்குகள், 4×4, 6×6, 8×8 மற்றும் 12×12 என நான்கு வகையான மாடல்களில் கிடைக்கிறது. 4×4, 6×6, 8×8 ஆகிய மாடல்களில் 10 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், 12×12 மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 2015ம் ஆண்டு 1,239 டாடா எல்பிடிஏ 6×6 மாடல் டிரக்குகளை சப்ளை செய்வதற்கு இந்திய ராணுவம் ஆர்டர் வழங்கியது. 2016ல் மேலும் 619 டிரக்குகளை சப்ளை செய்வதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. ரூ.1,300 கோடி மதிப்புடையதாக இந்த ஆர்டர் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 8×8 மாடலானது தரையிலிருந்து வான் இலக்குகளை குறிவைத்து ஏவுகணைகளை செலுத்தும் லாஞ்சர் வசதியுடன் கட்டமைக்கப்பட்டு வழங்கப்பட்டது.

மேலும், 8×8 மாடலானது பினாகா எம்பிஆர்ல் ராக்கெட் லாஞ்சர் மாடலாகவும், 12×12 மாடலானது நிர்பய் ஏவுகணையை செலுத்துவதற்கான மாடலாகவும் வடிவமைத்து இந்திய ராணுவத்திற்கு கொடுக்கப்பட்டது. 4×4 மாடலானது ராணுவத்தின் பல்வேறு விதமான பயன்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications