இந்தியாவில் தடை செய்யப்பட்ட புல் பாருடன் நெக்ஸான் இவி... டாடா அதிகாரியை டென்ஷனாக்கிய வாடிக்கையாளர்
தனது நெக்ஸான் இவி காரில் சந்தைக்கு பிறகான புல் பார்களை (bull bars) பொருத்திய வாடிக்கையாளருக்கு டாடா நிறுவனத்தின் டிசைன் பிரிவு அதிகாரி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சந்தைக்கு பிறகான புல் பார்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்றாக உள்ளது. இதனால் இவற்றை தனியார் அல்லது பொதுசாலை வாகனங்களில் பொருத்துவது சட்டப்படி குற்றமாகும். இதன் காரணமாக இவ்வாறான புல் பார்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை கண்டால் அவற்றின் மீது போலீஸார் தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனெனில் எந்தவொரு சூழலிலும் புல் பார்கள் வாகனத்திற்கு சிக்கலாக அமையக்கூடியவை. மேலும் பாதசாரிகளின் மீது மோத நேர்த்தால் இவை சிறிய விபத்தையும் பெரியதாக மாற்றிவிடும். இப்படிப்பட்ட ஆபத்துகள் நிறைந்த சந்தைக்கு பிறகான புல் பாரை தான் வாடிக்கையாளர் ஒருவர் தனது நெக்ஸான் இவி காருக்கு பொருத்தியுள்ளார்.

உலக இவி தினத்தை முன்னிட்டு டாடா நிறுவனம் சார்பில் நெக்ஸான் இவி கார் உரிமையாளர்களின் சந்திப்பு இணையம் மூலமாக நடைபெற்றது. உரிமையாளர்கள் தங்களது காரின் புகைப்படங்களை
டுவிட்டர் வாயிலாக டாடா நிறுவனத்தின் உலகளாவிய டிசைன் பிரிவின் முதன்மை அதிகாரி பிரதாப் போஸின் பார்வைக்கு கொண்டுவந்தனர்.

அப்போதுதான் அபேய் வெங்கடேஷ் என்பவர் தனது நெக்ஸான் இவி காரின் படத்தை புல் பாருடன் பதிவிட்டு பிரதாப் கோஸின் கருத்தை கேட்டார். அதற்கு பதில் அளித்த கோஸ், விபத்து நேரங்களில் இது சரியானதாக இருக்காது, மேலும் விபத்தின்போது பாதசாரிகளை இன்னும் மோசமான சூழலுக்கு கொண்டு செல்லும் என காட்டமாக தனது கருத்தை கூறியுள்ளார்.

பொதுவாக புல் பார்கள் காரை சிறிய விபத்துகளில் இருந்து தடுப்பதற்காகவும், பம்பர் சேதங்களை தவிர்பதற்காகவும் பொருத்தப்படுகின்றன. இவற்றிற்காக மட்டுமின்றி வாகனத்திற்கு முரட்டுத்தனமாக தோற்றத்தை வழங்குவதற்காகவும் தான் குறிப்பாக இந்தியர்களால் அதிகளவில் பொருத்தப்படுகின்றன.

ஆனால் உண்மையில் இவை விபத்துகளின் போது வாகனத்திற்கே எதிராக செயல்பட்டு சிறிய விபத்துகளிலும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகின்றன. மேலும் இவை காற்றுப்பைகளின் செயல்பாடுகளிலும் தலையிடுகின்றன. விபத்துகளின்போது ஒரு நொடி தாமதாக காற்றுப்பைகள் திறந்தால் கூட, பெரிய விபத்து நடந்து முடிந்திருக்கும்.

இதனாலும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் தான் இவற்றை இந்தியாவில் அரசாங்கம் தடை செய்துள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்த சமயத்தில் அத்தகைய புல் பாரை பொருத்திய வாகனங்களை போலீஸார் பாய்ந்து பாய்ந்து பிடித்து வந்தனர். ஆனால் தற்போதெல்லாம் அவ்வாறான வாகன ஓட்டிகளை போலீஸார் கண்டுகொள்வது இல்லை என்பதுதான் உண்மை.

கவனிக்கும் சில போலீஸாரும் இதற்கு பதிலாக பெயிண்ட் பாதுகாப்பு மென்படலத்தை பயன்படுத்தி பம்பரில் ஏற்படும் கீறல்களை தடுங்கள் என அறிவுரை மட்டுமே கூறுகின்றனர். இதனால்தான் இந்த நெக்ஸான் இவி கார் உரிமையாளர் அவ்வளவு தைரியமாக புல் பாரை பொருத்தி அதனை தயாரிப்பு நிறுவனத்திடமே காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications








