திரவ இயற்கை எரிவாயுவில் இயங்கும் பஸ்களை டெலிவிரி கொடுத்தது டாடா!
இந்தியாவிலேயே முதல்முறையாக திரவ இயற்கை எரிவாயுவில் இயங்கும் பஸ்களை டாடா மோட்டார்ஸ் டெலிவிரி கொடுத்துள்ளது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்பட்டு வருகிறது. பெருநகரங்களில் அதிகரித்து வரும் வாகனப் பெருக்கம் மற்றும் அவை வெளியிடும் நச்சுப் புகையால் காற்று மாசுபாடு அபாயங்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே, சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுவதை குறைக்கும் மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், எல்என்ஜி எனப்படும் திரவ இயற்கை எரிவாயுவில் இயங்கும் எஞ்சின் பொருத்தப்பட்ட புதிய பஸ்களை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி இருக்கிறது. கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய எரிபொருள் வகை பஸ் மாடலை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், இந்த பஸ்களுக்கு கொடுக்கப்பட்ட ஆர்டரின் பேரில் 4 எல்என்ஜி பஸ்களை டாடா மோட்டார்ஸ் டெலிவிரி கொடுத்துள்ளது. குஜராத் மாநிலம் தாஹேஜ் நகரை சேர்ந்த நிறுவனத்திற்கு இரண்டு எல்என்ஜி பஸ்களையும், கொச்சி நகரில் இரண்டு பஸ்களையும் டெலிவிரி கொடுத்துள்ளது டாடா.
இந்த புதிய ஸ்டார்பஸ் மாடலானது பக்கத்திற்கு தலா இரண்டு இருக்கைகள் கொண்ட 36 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதியை கொண்டுள்ளது. மேலும், குளிர்சாதன வசதியும் உள்ளது.
தவிரவும், 40 பேர் பயணிப்பதற்கான மாடல் மற்றும் 56 பேர் பயணிப்பதற்கான மாடலிலும் இந்த எல்என்ஜி பஸ் மாடல்கள் கிடைக்கும். குளிர்சாதன வசதி மற்றும் குளிர்சாதன வசதி இல்லாத மாடல்களிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் பஸ்களைவிட இந்த எல்என்ஜியில் இயங்கும் பஸ்களில் 2.5 மடங்கு கூடுதலாக எரிபொருளை நிரப்புவதற்கான எரிபொருள் கலன் உள்ளது. இதனால், ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 600 முதல் 700 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.
அதேபோன்று, பெட்ரோல், டீசலில் இயங்கும் பஸ்களை ஒப்பிடும்போது இந்த எல்என்ஜி எரிபொருளில் இயங்கும் பஸ்களிலிருந்து வெளியேறும் நச்சுப் புகை அளவு 30 சதவீதம் குறைவாக இருக்கும்.
இந்த பஸ்களை இயக்குவதற்கான செலவு மிக குறைவாக இருக்கும் என்பதுடன், பயணிகளுக்கு சிறப்பான பயண அனுபவத்தையும், பாதுகாப்பையும் வழங்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த எல்என்ஜி பஸ்களில் திரவ எரிவாயு இருப்பதால், எரிபொருள் கலனில் அழுத்தம் குறைவாக இருப்பதுடன், எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டிருப்பதால், தீப்பற்றும் வாய்ப்பு குறைவாக இருக்குமாம்.


Click it and Unblock the Notifications








