ரூ.1 லட்சத்தில் விற்கப்பட்ட டாடா நானோ & சஃபாரி ஸ்ட்ரோம் கார்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்...
டாடா நிறுவனம் நடுத்தர குடும்பங்களும் வாங்கும் வகையில் ரூ.1 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்திய நானோ மாடலின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியுள்ளது. மேலும் சஃபாரி ஸ்ட்ரோம் மாடலின் பெயரும் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய மாசு உமிழ்வு விதி கடந்த 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. முன்னதாக ஸ்டாக்கில் உள்ள பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்ய மார்ச் 31ஆம் தேதி வரையில் காலக்கெடு விதிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமடைந்ததால் இந்த காலக்கெடு ஏப்ரல் 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இருப்பினும் தற்சமயம் அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடியுள்ளதால் தயாரிப்பு மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவும் நெருங்கி வருவதால் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படாத வாகனங்களின் விற்பனைகள் ஒவ்வொன்றாக இந்தியாவில் நிறுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நானோ மற்றும் சஃபாரி ஸ்ட்ரோம் மாடல்களின் பெயர்களை இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது.

இதில் நானோ மாடலின் விற்பனை நிறுத்தத்திற்கு பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்படாதது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டாலும், இதன் விற்பனை எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதும், புதிய க்ராஷ் டெஸ்ட்டிற்கு ஏற்ற வகையில் அப்கிரேட் செய்வது செலவு அதிகமான பணியாக இருப்பதும் காரணங்களாக உள்ளன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நானோ மாடலில் 624சிசி, ட்வின் சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை பொருத்தி வருகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 38 பிஎச்பி பவரையும், 51 என்எம் டார்க் திறனையும் காருக்கு வெளிப்படுத்தும். இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 4-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆனது ஆற்றலை காரின் பின் சக்கரத்திற்கு வழங்கவல்லது. தற்போது இந்தியாவில் விற்பனை நிறுத்தப்பட்டுள்ள மற்றொரு டாடா தயாரிப்பு காரான சஃபாரி ஸ்ட்ரோம், பிரபலமான சஃபாரி ப்ராண்ட்டின் அப்டேட் வெர்சனாக சந்தையில் அறிமுகமானது.

சஃபாரி ஸ்ட்ரோம் மாடலில் 2.2 லிட்டர் வாரிகோர் 400 டீசல் என்ஜினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பொருத்தி வருகிறது. இந்த என்ஜின் 154 பிஎச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக டாடா சஃபாரி ஸ்ட்ரோம் மாடலில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இதனுடன் இந்த காரில் எலக்ட்ரானிக் ஷிஃப்ட் ஆன்-ஃப்ளை உடன் உள்ள 4x4 சிஸ்டமும் வழங்கப்படுகிறது. டாடா சஃபாரி ப்ராண்ட் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சந்தையில் விற்பனையில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நானோ மற்றும் ஸ்ட்ரோம் மாடல்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால் இவற்றின் பிஎஸ்6 அப்டேட் பணிகளில் டாடா நிறுவனம் மிக விரைவில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்சமயம் டாடாவின் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், இந்த இரு கார்களின் பிஎஸ்6 வெர்சன்களின் பெயர்களை இன்னும் சில வாரங்களுக்கு இந்நிறுவனத்தின் இணையத்தளத்தில் பார்க்க முடியாது.


Click it and Unblock the Notifications








