நெக்ஸான் இவி 3டி வர்த்தகம்... உலக இவி தினத்தை முன்னிட்டு அறிமுகப்படுத்தியது டாடா மோட்டார்ஸ்...
உலக இவி தினத்தை (செப்டம்பர் 9) முன்னிட்டு, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸன் இவி காரின் 3டி வர்த்தகத்தை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா நிறுவனத்தின் இந்த அறிவிப்பின் மூலமாக வாடிக்கையாளர்கள் நெக்ஸான் இவி காரின் முழு காட்சியையும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திலேயே காணலாம். இந்த 3டி காட்சிப்படுத்தல், மும்பையை சேர்ந்த எக்ஸென்ட்ரிக் என்ஜின் நிறுவனத்தின் ஒன் 3டி ப்ளாட்ஃபாரத்தின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இதனை பற்றிய முழு விரிவான மற்றும் முழுமையான கொள்முதல் அனுபவத்தையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

தற்போதைய கொரோனா வைரஸ் அச்சத்தால், டாட்டா மோட்டார்ஸ் வணிகம் செய்யும் போது வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளது. அரசாங்க உத்தரவிற்கு இணங்க டாடா கொண்டுவந்துள்ள இந்த பாதுகாப்பு வழிமுறைகள் சமூக இடைவெளி விதிமுறைகளை பராமரிக்க உதவும்.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன வர்த்தக பிரிவின் சந்தைப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர்கள் பராமரிப்பு தலைவர் ரமேஷ் டோராய்ராஜன் கூறுகையில், வாடிக்கையாளர்களின் அனுபவத்தையும் ஈடுபாட்டையும் மேம்படுத்துவதற்கான வழிகளை தீவிரமாக தொடர்ந்து நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தற்போதைய தொற்றுநோய் அச்சம், வணிகங்களின் அணுகுமுறையை மாற்றி புதிய இயல்புக்கு ஏற்ப மாற்றியமைக்க வலியுறுத்தியுள்ளது. ஒரு உள்நாட்டு பிராண்டாக இருப்பதால், ஒரு புதுமையான இந்திய தொழில்நுட்ப நிறுவனமான எக்ஸென்ட்ரிக் என்ஜினுடன் கூட்டுசேர்வது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

மேலும் எங்களது வாடிக்கையாளர்களின் ஈடுபாட்டை மறுவரையறை செய்வதால் நெக்ஸான் இவி 3டி வர்த்தக முயற்சி நிச்சயம் கைக்கொடுக்கும் என கூறினார். காரின் நிறம், வேரியண்ட்கள், வசதிகள் மற்றும் ஆக்ஸஸரீகளை இந்த நெக்ஸான் இவி 3டி வர்த்தகத்தின் வாயிலாக 360 கோணத்தில் வாடிக்கையாளர்கள் காண முடியும்.

முதல் ஆட்டோமோட்டிவ் இ-வர்த்தகமாக விளங்கவுள்ள இந்த 3டி வர்த்தகம், டாடா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் முகப்பு பக்கத்திலேயே மேற்கொள்ளும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. எக்ஸென்ட்ரிக் என்ஜின் நிறுவனத்தின் நிறுவனரும் சிஇஒ-வுமான வருண் ஷா கருத்து தெரிவிக்கையில், "இந்த நம்பமுடியாத சிறப்பு அறிமுகத்திற்காக டாடா மோட்டார்ஸுடன் ஒத்துழைப்பதும், அவர்களின் முயற்சியில் அவர்களை ஆதரிப்பதும் எங்களுக்கு கிடைத்த பாக்கியம்.

இவி தான் வாகன இயக்கங்களின் எதிர்காலம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு முக்கியமானதாகும். எங்களது ஒன் 3டி ஃப்ளாட்ஃபாரத்தை இவ்வாறு இ-வணிகத்துடன் ஒருங்கிணைப்பது இதுவே முதல்முறையாகும். டாடா மோட்டார்ஸின் இவி வாடிக்கையாளர்கள் தங்கள் ஆன்லைன் பயணத்தை முழுவதும் தடையற்ற அனுபவத்துடன் அனுபவிப்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்" என கூறினார்.

டாடா மோட்டார்ஸின் எலக்ட்ரிக் காம்பெக்ட் எஸ்யூவி ரக காரான நெக்ஸான் இவி-ல் 95 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார், 30.2kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்புடன் வழங்கப்படுகிறது. ஆற்றலை காரின் முன் சக்கரங்களுக்கு வழங்கும் இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பின் மூலமாக அதிகப்பட்சமாக 129 பிஎச்பி மற்றும் 245 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

தற்சமயம் உலகம் முழுவதும் நிலவும் கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது. இதுதான் தற்போது நெக்ஸான் இவி காரின் 3டி அனுபவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதற்கு மிக முக்கிய காரணமாகும்.
அதேநேரம் இந்த ப்ளாட்ஃபாரம் வாடிக்கையாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமில்லாமல், அவர்களது அலைச்சலையும் தவிர்க்கும்.


Click it and Unblock the Notifications








