தொழிற்சாலைகளை மீண்டும் திறந்தது டாடா மோட்டார்ஸ்... ஓரிரு நாட்களில் தயாரிப்பு பணிகள் ஆரம்பம்...
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உத்தரகாண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள தனது தொழிற்சாலை பணிகளை தகுந்த அரசாங்க அனுமதியுடன் ஆரம்பிக்க ஆயத்தமாகி வருவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் கொரோனா வைரஸினால் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24ஆம் தேதியில் இருந்து அமலில் உள்ளது. முதலில் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கினால் அனைத்து விதமான தொழில்களும் தற்காலிகமாக முடக்கப்பட்டன. இதில் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தப்பவில்லை.

முன்னணி நிறுவனங்களில் இருந்து சிறிய வாகன நிறுவனங்கள் வரை அனைத்தின் தொழிற்சாலைகளும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டு உள்ளன. ஆனால் தற்போது ஊரடங்கில் சிறிய தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளதால் ஒவ்வொரு ஆட்டோமொபைல் நிறுவனங்களாக தொழிற்சாலை பணிகளை மீண்டும் துவங்கி வருகின்றன.

இந்த வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உத்தரகாண்ட், பாண்ட்நகர் மற்றும் குஜராத், சனந்த் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை திறந்துள்ளது. இவற்றுடன் உத்தர பிரதேச தலைநகர் லக்னோ, மஹாராஷ்டிராவின் புனே, ஜார்காண்ட்டில் உள்ள ஜாம்ஷெட்பூர் மற்றும் கர்நாடாகா மாநிலத்தின் தார்வாட் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளையும் மீண்டும் திறக்க ஆயத்தமாகி வருகிறது.

இதற்கான அரசாங்க அனுமதிகளை பெற இந்நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருவதால் டாடாவின் இந்த இரு தொழிற்சாலைகளிலும் தயாரிப்பு வேலைகள் இன்னும் சில நாட்களில் துவங்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிஇஒ மற்றும் எம்டி குயிண்டர் புட்ஸ்செக் கூறுகையில், எங்களது பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பாளர்களின் பாதுகாப்பிற்கு தான் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.

இதனால் மீண்டும் திறக்கப்படவுள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் குறைவான அளவிலான முக்கிய பணியாளர்கள் சமூக இடைவெளியுடனும் பாதுகாப்பு கவசங்களுடனும் பணியை துவங்கவுள்ளனர். இத்தகைய பணிகளில் உள்ளூர் பணியாளர்கள் மட்டும் தான் ஈடுப்படுத்தப்படவுள்ளனர் என கூறினார்.

மேலும் வைரஸின் தாக்கத்தை பொறுத்து சப்ளையர்கள், விற்பனையாளர்கள், விநியோகஸ்தரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் செயல்பாடுகளை அளவிடவுள்ளோம். அதேநேரம் அதிகரித்து வாகன தேவையை சரியாக கையாளவும் தயாராக இருக்கிறோம் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் குயிண்டர் புட்ஸ்செக் கூறினார்.

தொழிற்சாலை பணிகளுடன் 200 டீலர்ஷிப்கள், 300 பயணிகள் வாகன பழுது பார்க்கும் மையங்கள் மற்றும் 400க்கும் அதிகமான விற்பனை அவுட்லெட்கள் மற்றும் 885 கமர்ஷியல் வாகன பழுது பார்க்கும் மையங்களும் நாடு முழுவதும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஊரடங்கு காலத்தில் கட்டாய பாதுகாப்பு தொழிற்நுட்பங்களை தயாரிப்பது மட்டுமில்லாமல், புதிய வடிவில் தயாரிப்பு பணிகளை மேற்கொள்வது மற்றும் டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்துவது குறித்தும் விவாதித்து வருகிறது.


Click it and Unblock the Notifications








