8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உச்சத்தை தொட்ட கார் விற்பனை... டாடா ஹேப்பி அண்ணாச்சி!
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனை 8 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இது அந்நிறுவனத்திற்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு குழுமமமாக உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கார் விற்பனை பிரிவில் எதிர்பார்த்த அளவு சோபிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்து வந்தது. ஆனால், தன் கார்கள் மீதான மோசமான பிம்பத்தை உடைத்து எறியும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டது.

இதற்கு கொஞ்சம் கொஞ்சமாக பலன் கிட்டத் துவங்கி இருக்கிறது. அந்நிறுவனத்தின் அல்ட்ராஸ்,டியாகோ, நெக்ஸான் ஆகிய மாடல்களுக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. எனினும், கொரோனா காரணமாக, சில மாதங்களாக தட்டு தடுமாறியது.

இந்த சூழலில், இரட்டிப்பு சந்தோஷத்தை தரும் வகையில், கடந்த செப்டம்பரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனை தடாலடியாக உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் 21,200 கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது.

கடந்த மாதத்தில் அல்ட்ராஸ், டியாகோ, நெக்ஸான் கார்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை உயர்வுக்கு முக்கிய பங்களிப்பை வழங்கின. கடந்த மாதத்தில் 6,080 டியாகோ கார்களும், 5,952 அல்ட்ராஸ் கார்களும், 6,007 நெக்ஸான் எஸ்யூவிகளும் விற்பனையாகி இருக்கின்றன.

இதுதவிர்த்து, 1,755 ஹாரியர் எஸ்யூவிகளும், 1,406 டிகோர் கார்களும் விற்பனையாகி இருக்கின்றன. இதனால், புதிய உச்சத்தை டாடா மோட்டார்ஸ் தொட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் விற்பனையுடன் ஒப்பிடுகையில், இது 162 சதவீத உயர்வாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு விற்பனை புதிய உச்சத்தை தொட்டிருப்பதுடன் மற்றொரு சந்தோஷமான செய்தியும் டாடா மோட்டார்ஸுக்கு கிடைத்துள்ளது. அதாவது, கடந்த மாதத்தில் மாருதி சுஸுகி, ஹூண்டாய் நிறுவனங்களுக்கு அடுத்து விற்பனையில் மூன்றாவது பெரிய கார் நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் டிசைன், பாதுகாப்பு அம்சங்களில் மிகச் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன. அடுத்து, தொழில்நுட்ப வசதிகளிலும் இளம் தலைமுறையினரை கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்த அம்சங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








