பல்பு வாங்கிய எஸ் பிரஸ்ஸோ! நாங்க இருக்கோம் என காலரை தூக்கிவிடும் டாடா! இந்த கார் ரொம்ப பாதுகாப்பானது
மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபல கார்களில் ஒன்றான மாருதி எஸ் பிரஸ்ஸோ பாதுகாப்பு ரேட்டிங்கில் மண்ணைக் கவ்வியது. இந்த நிலையில் டாடா நிறுவனம் வெளியிட்ட டுவிட்ட வைரலாகத் தொடங்கியுள்ளது. அந்த டுவிட்டில் டாடா என்ன கூறியுள்ளது என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மாருதி சுசுகி நிறுவனத்தின் விலைக் குறைந்த மற்றும் பிரபலமான காராக எஸ் பிரஸ்ஸோ இருக்கின்றது. இது ஓர் மைக்ரோ ரக எஸ்யூவி காராகும். இக்கார் மிக அடக்கமான தோற்றம் மற்றும் எக்கசக்க வசதிகளைக் கொண்டிருப்பதால் இந்தியாவில் அமோகமான விற்பனையைப் பெற்று வருகின்றது. குறிப்பாக, தினசரி பயணத்தை மேற்கொள்ளும் இந்திய இளைஞர்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இக்கார் அண்மையில் குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் பரிசோதனையில் பல்பு வாங்கும் அளவிற்கு மதிப்பெண்ணைப் பெற்றது. அதாவது, பாதுகாப்பிற்கு துளியளவும் உகந்த கார் அல்ல இது என்பதை விளக்கும் வகையில் அதன் முடிவுகள் அமைந்திருந்தன. இதனால், இக்காரை தயாரித்து வரும் மாருதி சுசுகி முதல் காரை புதிதாக களமிறக்கிய அதன் உரிமையாளர்கள் வரை அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஓர் பதிவை வெளியிட்டுள்ளது. அதில், பாதுகாப்பான அதன் டியாகோ கார்களை விளம்பரப்படுத்தும் வகையில் கருத்தை வெளியிட்டிருக்கின்றது. டாடா நிறுவனத்தின் பாதுகாப்பு நிறைந்த கார்களில் டியாகோவும் ஒன்று.

இக்கார் பாதுகாப்பு தரத்தில் நான்கு நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. குளோபல் என்சிஏபி அமைப்பு மேற்கொண்ட மோதல் பரிசோதனையிலேயே இந்த ரேட்டிங்கை டாடா டியாகோ பெற்றது. எனவேதான், இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மாருதி எஸ் பிரஸ்ஸோ கார் பாதுகாப்பு ரேட்டிங்கில் பல்பைப் பெற்ற பின்னர் இந்த விளம்பரத்தை டாடா செய்யத் தொடங்கியுள்ளது.

மாருதி எஸ் பிரஸ்ஸோ கிராஷ் டெஸ்டில் அப்பளம்போல் நொறுங்கியதை எடுத்துரைக்கும் விதமாக உடைந்த காஃபி கோப்பையின் புகைப்படத்தையும், அதில் இருந்து காஃபி கொட்டைகள் சிதறிக் கிடக்கின்ற வகையில் ஓர் புகைப்படத்தை அது வெளியிட்டுள்ளது. இத்துடன், பாதுகாப்பான டியாகோ காரை புக் செய்யுங்கள் என்ற தகவலையும் அது கூறியுள்ளது.

இந்தியாவில் டாடா டியாகோ கார்கள் ரூ. 4.70 லட்சம் என்ற விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், ரூ. 3,555 என்ற மாதத் தவணையிலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. தற்போது, இக்காரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இக்காரை இந்தியாவில் பயன்படுத்தி வருவதாக டாடா அதன் அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

டாடா டியாகோ காரில் ஏபிஎஸ், இபிடி, சீட் பெல்ட்டை நினைவூட்டும் வசதி மற்றும் அதிவேகத்தை எச்சரிக்கும் சிஸ்டம், இரட்டை காற்றுப்பைகள், பின்பக்க பார்க்கிங் உதவி என பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, இக்காரின் உடல் கட்டமைப்பும் அதிக உறுதியானதாக இருக்கின்றது. இவற்றின் காரணமாகவே இந்த கார் பாதுகாப்பு ரேட்டிங்கில் 4 நட்சத்திரங்களைப் பெற்றிருக்கின்றது.

டாடா நிறுவனம் டியாகோ காரை பிஎஸ்6 தரம் கொண்ட 1.2 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் வழங்குகின்றது. இந்த பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 85 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும் சக்தி கொண்டது. மேலும், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.


Click it and Unblock the Notifications








