சூப்பர்... பைக்கை விட குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்... எவ்வளவுனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...
பைக்கின் விலையை விட குறைவான செலவில் எலெக்ட்ரிக் கார் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு உடனடியாக அதிகரித்தாக வேண்டும். நாட்டின் காற்று மாசுபாடு பிரச்னைக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் தீர்வு. மேலும் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யின் இறக்குமதியை குறைப்பதற்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் உதவி செய்யும். இதன் மூலம் இந்தியாவிற்கு பொருளாதார ரீதியிலான பலன்கள் கிடைக்கும்.

இப்படி பல்வேறு நன்மைகள் இருந்தாலும் கூட, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் இன்னும் பெரியளவில் பிரபலமடையவில்லை. இந்தியாவில் தற்போது ஒரு சில நிறுவனங்கள் மின்சார வாகனங்களை விற்பனை செய்கின்றன. ஆனால் ஐசி இன்ஜினில் இயங்கும் வழக்கமான வாகனங்களை காட்டிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.

இந்தியர்கள் வாகனத்தின் விலைக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் இன்னும் பெரிய அளவில் பிரபலமடையாமல் இருப்பதற்கு இதுவே மிக முக்கியமான காரணம். இப்படிப்பட்ட சூழலில், மிகவும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார் ஒன்றை நம் நாட்டு மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

மைசூரில் உள்ள வித்யவர்த்தகா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங்கின் (VVCE - Vidyavardhaka College of Engineering), மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையை சேர்ந்த மாணவர்கள் எலெக்ட்ரிக் வாகனம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். டாடா நானோ காரின் அடிப்படையில் இந்த எலெக்ட்ரிக் வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விலையை விட இந்த டாடா நானோ எலெக்ட்ரிக் காரின் விலை குறைவு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த டாடா நானோ எலெக்ட்ரிக் காரை உருவாக்கியுள்ள மாணவர்கள் குழு E-ight என்று அழைக்கப்படுகிறது. E-ight என்பது Electric Vehicle Is Good For Health என்பதை குறிக்கிறது.

இறுதியாண்டு ப்ராஜெக்ட்டின் ஒரு பகுதியாக அவர்கள் டாடா நானோ எலெக்ட்ரிக் காரை தயாரித்துள்ளனர். இந்த டாடா நானோ எலெக்ட்ரிக் காரை உருவாக்குவதற்கு ஆன மொத்த செலவானது, புத்தம் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விலையை விடவும் குறைவு. இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை 1.55 லட்ச ரூபாய் ஆகும்.

ஆனால் டாடா நானோ எலெக்ட்ரிக் காரை உருவாக்க இந்த மாணவர்கள் 1,38,158 ரூபாயை மட்டுமே செலவு செய்துள்ளனர். 41,500 ரூபாய் மதிப்பில் யூஸ்டு டாடா நானோ கார் ஒன்றை மாணவர்கள் வாங்கியுள்ளனர். அதை எலெக்ட்ரிக் காராக மாடிஃபிகேஷன் செய்வதற்கு 96,658 ரூபாயை செலவு செய்துள்ளனர். எனவே ஒட்டுமொத்த செலவே வெறும் 1,38,158 ரூபாய் மட்டும்தான் ஆகியுள்ளது.

எலெக்ட்ரிக் மோட்டார் யூனிட், பேட்டரிகள், கண்ட்ரோலர், ஆக்ஸஸெரிகள் ஆகியவை மாடிஃபிகேஷனுக்கான செலவில் அடங்குகின்றன. ஒரே ஒரு நபர் மட்டும் பயணம் செய்தால், இந்த டாடா நானோ எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 40 கிலோ மீட்டர்களாக இருக்கும். ஒரு முறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், எலெக்ட்ரிக் கார் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதே ரேஞ்ச் என குறிப்பிடப்படுகிறது.

அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் காரை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு வெறும் 1.15 ரூபாய் மட்டுமே ஆகும். இது மிக குறைவான செலவாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ரேஞ்சும், இயக்குவதற்கான செலவும் ஒரே ஒரு நபர் பயணம் செய்வதை வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. நான்கு பேர் பயணம் செய்வதாக இருந்தால், இந்த காரின் ரேஞ்ச் 35 கிலோ மீட்டர்களாக குறைந்து விடும்.

அத்துடன் காரை இயக்குவதற்கான செலவு ஒரு கிலோ மீட்டருக்கு 1.32 ரூபாயாக உயர்ந்து விடும். ஒரே ஒருவர் மட்டும் பயணம் செய்தால், இந்த டாடா நானோ எலெக்ட்ரிக் கார் மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் வேகத்தில் செல்லும். அதே சமயம் அதிகம் பேர் பயணம் செய்வதாக இருந்தால், இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 35 முதல் 40 கிலோ மீட்டர் என மாறுபடும்.

பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் என பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக 6 மணி நேரம் மற்றும் 36 நிமிடங்கள் ஆகும். க்யிக் சார்ஜிங் ஆப்ஷன் இல்லை. எனினும் இந்த டாடா நானோ எலெக்ட்ரிக் கார், காற்று மாசுபாட்டை ஏற்படுத்தாது. தற்போது இந்தியாவில் பல்வேறு நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன.

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களே இதற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கின்றன. இதனால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு முயல்கிறது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகமாக இருப்பதால், இந்தியாவில் அவை இன்னும் பிரபலமடையவில்லை.

எனினும் வருங்காலத்தில் குறைவான விலையில் அதிக எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையும் பட்சத்தில், அவற்றை வாங்குவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








