ரூ.1,500 கோடியை அடுத்து மீண்டும் பெரும் தொகையை நிதியாக வழங்கிய டாடா! நெகிழ்ச்சியில் மக்கள்!
கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு உதவிக் கரம் நீட்டும் விதமாக ரூ. 1,500 நிதியுதவியை டாடா நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது மீண்டுமொரு முறை பெருந்தொகையை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

ஒட்டுமொத்த உலகமே கொரோனா வைரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றன. இந்த வைரசிடம் இருந்து காப்பதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தாலும், அது பயன்பாட்டிற்கு வர இன்னும் பல மாதங்கள் ஆகும் என்ற அதிர்ச்சி தகவலும் கூடவே பரவிக் கொண்டிருக்கின்றது.

எனவே, மக்களை வைரசிடம் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இந்தியாவிலும் நோய் தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசின் இந்த நடவடிக்கையுடன் இணைந்து ஒரு சில தனியார் நிறுவனங்களும் உதவிக் கரம் நீட்டி வருகின்றன.

அதில், டாடா நிறுவனத்தின் பங்கு அளப்பறியது என்றே கூறலாம். இதனை உறுதிப்படுத்தும் வகையில் முன்னதாக கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலத்தில் ரூ. 1,500 கோடியை நிதியுதவியாக வழங்க இருப்பதாக அறிவித்திருந்தது. இது, எந்தவொரு நிறுவனம் அறிவிக்காத உச்சபட்ச நிதியுவியாகும். இதனால், ஒட்டு மொத்த இந்தியாவே நெகிழ்ச்சி அடைந்தது.

டாடா குழுமத்தின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பேராதரவு பெருகத் தொடங்கியது. இந்த நிலையில், தற்போது மீண்டுமொரு உதவி திட்டத்தை டாடா சன்ஸ் அறிவித்துள்ளது.
இம்முறை 20 டாடா விங்கர் ஆம்புலன்ஸ்கள் மற்றும் 100 வென்டிலேட்டர்கள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், ரூ. 10 கோடி நிதியுதவி வழங்க இருப்பதாகவும் டாடா சன்ஸ் பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

இந்த பேருதவியை மஹாரஷ்டிரா மாநிலத்திற்காக டாடா நிறுவனம் வழங்கியிருக்கின்றது. இதனை அம்மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் டாடா சன்ஸ்-இன் என் சந்திரா, மேயர் கிஷோரி பெட்நேகர் முன்னிலையில் வழங்கினார்.

இதில், ஆம்புலன்ஸ் மற்றும் 100 வென்டிலேட்டர்கள் மட்டுமே மும்பை மாநகர அதிகாரிகளிடம் மக்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டது. ரூ. 10 கோடி நிதியுதவியானது அம்மாநிலத்தின் வைரஸ் மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை குறித்து ஆய்வு செய்து வரும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவம்குறித்த ஆய்வை விரைவுப் படுத்த பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இதனை வழங்கியிருக்கின்றது டாடா.

நாட்டில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதில், 2 லட்சத்திற்கும் அதிகமான வியாதி தொற்றுடையவர்கள் மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவேதான் அம்மாநிலத்தில் மருத்துவ வசதியை உயர்த்தும் வகையில் சிறப்பு உதவியாக டாடா சன்ஸ் நிறுவனம் இந்த நிதியுதவியை வழங்கியிருக்கின்றது.

இதனடிப்படையிலேயே ஆம்புலன்ஸ் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் டாடா விங்கர் மாடலிலான 20 ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், உயிர் காக்கும் கருவியான 100 வென்டிலேட்டர்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்த ஆம்புலன்ஸ்கள் பிஎஸ்-6 தரத்திலானவை ஆகும். இது தற்போது இந்திய சந்தையில் இரு வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை, 3200 டபிள்யூபி மற்றும் 3488டபிள்யூபி ஆகியவை ஆகும்.

இவையிரண்டும் ஒரு ஸ்டிரெட்சரை மட்டுமே எடுத்தும் செல்லும் வசதியைக் கொண்டுள்ளது. எனவே, இதில் அதிக இடவசதி இருக்கின்றது. ஆகையால், கூடுதல் உயிர்காக்கும் கருவிகளை இதில் ஏற்றிக் கொள்ள முடியும். இத்துடன், அட்டெண்டர்களையும் கூடவே ஏற்றிச் செல்ல முடியும்.

இந்த ஆம்புலன்ஸில் 2.2 லிட்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 73.5 கிவாட் திறனை வெளிப்படுத்தும். இது 98 பிஎச்பி திறனுக்கு இணையானதாகும். மேலும், 200 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இத்துடன், ஆம்புலன்ஸில் பயணிக்கக் கூடிய நோயாளிகளுக்கு ஏதுவாக ஹைட்ராலிக் டெலிஸ்கோபிக் ஷாக் அப்சார்பர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இது கரடு, முரடான சாலையில் பயணித்தாலும் நோயாளிகளுக்கு எந்தவொரு அசௌகரியமான உணர்வையும் ஏற்படுத்தாது. இத்துடன், அட்வான்ஸ்ட் லைஃப் சப்போர்ட் கருவிகள் மற்றும் உபகரணங்களும் விங்கர் ஆம்புலன்ஸில் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த சிறப்பு வாய்ந்த ஆம்புலன்ஸ்களைதான் டாடா சன்ஸ் பவுண்டேஷன் மஹாரஷ்டிரா மாநிலத்திற்கு வழங்கியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications