பிரபல ஹாரியர் காரின் முன்புற தோற்றத்தில் உருவாகிய டாடா விங்கர்... ஆட்டோ எக்ஸ்போவில் முதல் தரிசனம்..!
டாடா நிறுவனம் அதன் பிரபல ஹாரியர் எஸ்யூவி காரின் டிசைனைப் பயன்படுத்தி விங்கர் மினி வேனை அப்டேட் செய்துள்ளது. இதனால், இந்த கார் மிகப்பெரிய தோற்றமுடைய காராக மாறியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவைச் சேர்ந்த பிரபல டாடா நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் கெத்து காட்டும் விதமாக பல்வேறு வாகனங்களை காட்சிப்படுத்தியது. இதில், புத்தம் புதிய மற்றும் அப்கிரேட் செய்யப்பட்ட மாடல்களும் அடங்கும்.
அந்தவகையில், டாடாவின் மிகவும் பிரபலமான போக்குவரத்து வாகனங்களில் ஒன்றான டாடா விங்கர் வேனின் புதுப்பிக்கப்பட்ட மாடலும் காட்சிப்படுத்தப்பட்டது. இதனை 2007ம் ஆண்டே இந்நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்தது.

இந்நிலையில், இதன் புதுப்பிக்கப்பட்ட மாடல் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது 15 + 1 இருக்கை அமைப்பைக் கொண்ட மினி வேன் ஆகும்.
இந்த வேனுக்கு சில காஸ்மெடிக் சேஞ்சை வழங்கிய டாடா, பிஎஸ்-6 தரத்திற்கு இணையாகவும் உயர்த்தியிருக்கின்றது. குறிப்பாக இந்த மினி வேனின் முகப்பு பகுதிக்கு டாடாவின் பிரபல மாடல்களில் ஒன்றான ஹாரியர் எஸ்யூவி காரைப் போன்ற தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகையால், டாடா விங்கர் வேனுக்கு இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியங்கள் வழங்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. டாடா ஹாரியர் எஸ்யூவி கார்தான் இந்த டிசைன் மொழியில் உருவாக்கப்பட்ட முதல் காராகும். இதையடுத்து, புது முகமாக அறிமுகமாகியுள்ள அல்ட்ராஸ் காரை டாடா தயாரித்திருக்கின்றது.

இந்த விங்கர் வேனுக்கு டாடா ஹாரியர் எஸ்யூவி-யின் தோற்றத்தை வழங்கும் விதமாக அந்த காரில் என்ன எல்இடி மின் விளக்கு பொருத்தப்பட்டிருக்கின்றதே அதே மின் விளக்குதான் வேனிலும் பொருத்தப்பட்டுள்ளது.
டாடா சின்னம், கிடைமட்ட குரோம் ஸ்ட்ரிப், மறு சீரமைக்கப்பட்ட க்ரில் மற்றும் பம்பர் உள்ளிட்டவை விங்கர் வேனுக்கு மிகவும் கவர்ச்சியான கார்களைப் போன்ற தோற்றத்தை வழங்கியுள்ளது.

இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகளால் இந்த கமர்ஷியல் வேன் பாசஞ்ஜர் எஸ்யூவி காரைப் போன்று மாறியிருக்கின்றது. தொடர்ந்து, இந்த புதிய மாற்றத்தால் வேனின் பாதுகாப்பு தன்மை அதிகரித்திருக்கின்றது. குறிப்பாக முகப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கணிசமான மாற்றங்கள் முன் பக்கத்தில் அமரும் பயணிகள் மற்றும் ஓட்டுநருக்கு பாதுகாப்பை அதிகரித்து வழங்கும் வகையில் உள்ளது.

தொடர்ந்து, இந்த மாற்றத்தால் குடும்பமாக சுற்றுலா செல்லும் பயணிகளைக்கூட சொந்த பயன்பாட்டிற்காக வாங்க இந்த வேன் கவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், குடும்பங்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவான பல்வேறு சிறப்பம்சத்தை இந்த வேன் பெற்றிருக்கின்றது.

குறிப்பாக தனியார் கார்களில் பயன்படுத்துவதைப் போன்ற 5 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல், பியானா கருப்பு நிறத்திலான பிள்ளர்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பின் பக்க கதவுகள் வேனுக்கு கூடுதல் கவர்ச்சியை சேர்க்கும் வகையில் உள்ளது.
இதுமட்டுமின்றி, வேனின் இன்டீரியரிலும் பல்வேறு மாற்றங்களை டாடா செய்துள்ளது. வேனின் காக்பிட் முதல் ரூஃப் வரை பல்வேறு புதுப்பித்தல்களை அது வழங்கியுள்ளது.

இத்துடன், தொழில்நுட்ப வசதிகளாக தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபேப்ரிக் இருக்கைகள் மற்றும் சில்வர்/பியானோ கருப்பு நிறத்திலான ஏசி கன்ட்ரோல் க்னாப்புகள், ஒவ்வொரு இருக்கைக்கும் தனிப்பட்ட யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், தனிப்பட்ட ஏசி வெண்ட், புஸ்பேக் இருக்கை மற்றும் ஆம்பிள் ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகின்ற வகையில் மிகவும் உறுதியான கட்டமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது, அதிக அதிர்வு மற்றும் வெளிப்புற இரைச்சலை குறைத்து சௌரியமான பயண அனுபவத்தை நமக்கு வழங்கும்.

இதேபோன்று, இந்த வேனில் செய்யப்பட்ட மிக முக்கியமான மாற்றமாக இதன் எஞ்ஜினை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்திய செயல் இருக்கின்றது. இந்த 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது. இதில், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வேன் ரூ. 12 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








