தரமான சம்பவத்தை செய்த சந்திரசேகர ராவ்... சந்தோஷத்தில் தெலங்கானா மாநில மக்கள்... என்னனு தெரியுமா?
தெலங்கானா மாநில அரசு அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு மிகவும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க முடியும் என்பதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம் என்பதால், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடியும் மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார்.

எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசு மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா போன்ற மாநில அரசுகளும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் தீவிரமாக உள்ளன. இந்த வரிசையில் மின்சார வாகனங்களை பிரபலமாக்குவதற்காக தெலங்கானா மாநில அரசு தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன் அண்டை மாநிலமான ஆந்திரா மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை போன்று தற்போதைய முதல்வர் ஜெகன் மோகனும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதற்கு இணையாக தெலங்கானாவும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன்படி புதிய மின்சார வாகன மற்றும் ஆற்றல் சேமிப்பு தீர்வு கொள்கைக்கு, தெலங்கானா மாநிலத்தின் அமைச்சரவை நேற்று (ஆகஸ்ட் 5) ஒப்புதல் வழங்கியுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதே இதன் முக்கியமான நோக்கம்.

அத்துடன் சலுகைகளை வழங்குவதன் மூலம் மின்சார வாகன துறை சார்ந்த முதலீட்டாளர்களை ஈர்ப்பதும் இதன் நோக்கங்களில் ஒன்றாக உள்ளது. இந்த புதிய கொள்கையின்படி, முதலில் வாங்கப்படும் 2 லட்சம் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கும், 5,000 தனியார் மின்சார கார்களுக்கும் சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து 100 சதவீத விலக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதலில் வாங்கப்படும் 20,000 மின்சார மூன்று சக்கர வாகனங்கள், 5,000 மின்சார வர்த்தக பயணிகள் வாகனங்கள் (டாக்ஸி மற்றும் சுற்றுலா கேப்கள் ஆகியவை) மற்றும் 500 மின்சார பேருந்துகளுக்கும் இந்த விலக்கு பொருந்தும். சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து 100 சதவீத விலக்கு வழங்கப்பட்டுள்ளதால், மின்சார வாகனங்களின் ஆன் ரோடு விலை குறையும்.

பொதுமக்கள் மின்சார வாகனங்களை வாங்குவதில் இருக்கும் மிகப்பெரிய தடைக்கல்லே அவற்றின் அதிக விலைதான். எனவே விலையை குறைக்கும் முயற்சியாக இந்த சலுகையை தெலங்கானா மாநில அரசு வழங்கியுள்ளது. இதன் காரணமாக தெலங்கானா மாநிலத்தில் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தெலங்கானாவை மின்சார வாகனங்களின் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தெலங்கானாவில் தொழிற்சாலைகளை நிறுவ முன்வரும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு திட்டமிட்டப்பட்டுள்ளது. இதன்பேரில் ஒரு சில முன்னணி நிறுவனங்கள் தெலங்கானாவில் தங்கள் ஆலைகளை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய முதலீடுகள் மூலமாக ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மத்திய, மாநில அரசுகளின் இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் காற்று மாசுபாடு பிரச்னைகள் காரணமாகவும் எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள்தான் இந்திய சாலைகளை ஆளப்போகின்றன.


Click it and Unblock the Notifications








