டெஸ்லா கார்களுக்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு ஓர் சூப்பர் நியூஸ்!
டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களுக்காக நீண்ட காலமாக காத்திருக்கும் இந்தியர்களுக்கு ஒரு சூப்பரான செய்தியை அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் உலக அளவில் பெரிய அளவில் பிரபலமாகி உள்ளது. அருமையான டிசைன், செயல்திறன், அதிக ரேஞ்ச் ஆகியவற்றுடன் வேற லெவல் தொழில்நுட்பங்கள் மூலமாக வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. எலெக்ட்ரிக் காரை விரும்பாதவர்களையும் தன்பால் கவர்ந்து வருகிறது டெஸ்லா கார் மாடல்கள்.

இந்த நிலையில், டெஸ்லா கார்களை எதிர்பார்த்து இந்தியர்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். ஆனால், இந்தியாவில் வரி விதிப்பு நடைமுறைகள் உகந்ததாக இல்லை என்று டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் கூறி வருகிறார். மேலும், டெஸ்லா கார்களின் அறிமுகத்தையும் தள்ளிப் போட்டு வருகிறார்.

இந்த நிலையில், இந்தியாவில் டெஸ்லா கார்கள் வருகை குறித்து அண்மையில் உறுதியான தகவல் ஒன்றை வெளியிட்டார். அதில், அடுத்த ஆண்டு நிச்சயம் டெஸ்லா கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று சமூக வலைதளம் மூலமாக உறுதிப்படுத்தி இருந்தார். இது இந்திய டெஸ்லா பிரியர்கள் மத்தியில் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த சூழலில், தற்போது அடுத்த ஒரு மகிழ்ச்சியான தகவலை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். அதில், வரும் ஜனவரியில் இருந்து டெஸ்லா கார்களை இந்தியாவில் இருந்து புக்கிங் செய்வதற்கான வசதி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால், அடுத்த ஆண்டு டெஸ்லா கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. மேலும், இந்த வசதி வழங்கப்படும்போது எந்தெந்த கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதும் தெரிய வரும். எனவே, இன்னும் இரண்டு மாதங்களில் எந்தெந்த டெஸ்லா கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிந்துவிடும் என்பதால், டெஸ்லா பிரியர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

முதலாவதாக இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 அல்லது மாடல் எஸ் கார் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த கார்களில் மாடல் 3 மிக குறைவான விலை டெஸ்லா மாடலாக இருப்பதால், அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்த கார்கள் இந்தியர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இதில், மாடல் 3 காருக்கு ஏற்கனவே இந்தியாவில் பலர் முன்பதிவு பல ஆண்டுகளாக காத்து கிடப்பதும் குறிப்பிடத்தக்கது. டெஸ்லா இணையதளத்தின் புக்கிங் செய்வதற்கான நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறும்போது அதிகாரப்பூர்வமாக பல முக்கியத் தகவல்களை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

இதனிடையே, கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் தனது கார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் டெஸ்லா ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக, கர்நாடக அரசுக்கும், டெஸ்லா அதிகாரிகளுக்கும் இடையே பேச்சு நடந்து வருவதாகவும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications








