போலீஸ் சோதனையில் தேறிய டெஸ்லா மாடல் எஸ்... எரிபொருள் செலவில் ஆண்டுக்கு 3 லட்ச ரூபாய் மிச்சம்...
காவல் துறையின் சோதனையில் டெஸ்லா மாடல் எஸ் தேறியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃப்ரீமோண்ட் நகர காவல் துறையில், போலீஸ் காராக பதிவு செய்யப்படுவதற்கான சோதனையில் டெஸ்லா மாடல் எஸ் (Tesla Model S) தேறியுள்ளது. இந்த கலிஃபோர்னியா மாகாணத்தில்தான் டெஸ்லா நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்லா மாடல் எஸ் கார்கள் சுமார் ஒரு வருட காலமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன் முடிவில் அவை ரோந்து பணிகளுக்கு ஏற்றவையாக கருதப்படுகின்றன. 2007 டோட்ஜ் சார்ஜருக்கு (2007 Dodge Charger) மாற்றாக, 2014 டெஸ்லா மாடல் எஸ் 85 (2014 Tesla Model S 85) காரை, காவல் துறை கடந்த 2018ம் ஆண்டு வாங்கியது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

டெஸ்லா மாடல் எஸ் எலெக்ட்ரிக் கார் என்பதால், எரிபொருளுக்கான செலவில் 4,000 அமெரிக்க டாலர்களை காவல் துறை சேமித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு வருடத்தில் சேமிக்கப்பட்ட தொகையாகும். இந்திய மதிப்பில் பார்த்தால் தோராயமாக இது 3 லட்ச ரூபாய் ஆகும். ஒரு வருடத்தில் 3 லட்ச ரூபாய் சேமிப்பு என்பது உண்மையிலேயே நல்ல விஷயம்தான்.

சாலைக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பாக காவல் துறையினர் இந்த காரை பல்வேறு விதங்களில் சோதனை செய்துள்ளனர். காவல் துறையினரின் வழக்கமான ரோந்து பணிகளுக்கு ஒரு எலெக்ட்ரிக் கார் பொருந்துமா? எரிபொருள் செலவுகளை கணிசமான அளவில் குறைக்க உதவுமா? என்பதை கண்டறிவதே இதன் நோக்கமாக இருந்தது.

ஆனால் எரிபொருள் செலவுடன் சேர்த்து, பராமரிப்பு செலவையும் டெஸ்லா மாடல் எஸ் குறைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் பொதுவாக சுற்றுச்சூழலுக்கும் உகந்தவை என்பது கூடுதல் சிறப்பம்சம். வழக்கமான பெட்ரோல், டீசல் கார்களை போல் அவை காற்று மாசுபாட்டை ஏற்படுத்தாது.

இதற்கிடையே காவல் துறையினர் சோதனை செய்த டெஸ்லா மாடல் எஸ் கார், வழக்கமான ரோந்து வாகனத்தை விட 27 நாட்கள் அதிகமாக சேவையில் இருந்தது. இதன் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 265 மைல்கள் பயணம் செய்ய முடியும். ஆனால் காவல் துறையினர் தினமும் 40-70 மைல்கள் வரை மட்டுமே ரோந்து செல்வார்கள்.

எனவே ரேஞ்ச் விஷயத்திலும் எந்த குறைபாடும் இல்லை. இதன் காரணமாக டெஸ்லா மாடல் எஸ் சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் உலகம் முழுக்க எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமாகி வருகின்றன. எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் டெஸ்லாதான் உலகிலேயே தலைசிறந்த நிறுவனமாக திகழ்கிறது.

இந்திய வாடிக்கையாளர்களும் டெஸ்லா நிறுவனத்தின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். மிக நீண்ட காலமாகவே இந்த எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், அனேகமாக டெஸ்லா நிறுவனம் அடுத்த ஆண்டு இந்திய சந்தைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி டெஸ்லா அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








