டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களுக்கான இந்தியர்களின் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது!
டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களின் இந்திய அறிமுகம் குறித்த புதிய தகவலை அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். இந்திய டெஸ்லா பிரியர்கள் மற்றும் மின்சார கார் வாங்க திட்டமிடுவோர் மத்தியில் இந்த செய்தி பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் மின்சார கார் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமானதாக மாறி இருக்கிறது. டிசைன், நவீன தொழில்நுட்ப அம்சங்களின் சங்ககமாக இந்த கார்கள் வருவதுடன், பாதுகாப்பு மற்றும் இடவசதியிலும் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில், டெஸ்லா கார்களின் அறிமுகத்தை இந்திய வாடிக்கையாளர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவ்வப்போது இதுகுறித்த செய்தி வருவதும் அடங்கிவிடுவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் டெஸ்லா கார்களின் அறிமுகம் குறித்து ட்விட்டர் மூலமாக எலான் மஸ்க்கிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. டீ ஷர்ட்டுகளில் இந்தியாவுக்கு டெஸ்லா வேண்டும் மற்றும் டெஸ்லாவை விரும்புகிறோம் என்ற பொருளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட டீ ஷர்ட்டுகளுடன் இந்த கேள்வி வைக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்துள்ள அளித்துள்ள எலான் மஸ்க், அடுத்த ஆண்டு இந்தியாவில் களமிறங்குவோம்," என்று தெரிவித்துள்ளார். இதனால், கடந்த பல ஆண்டுகளாக டெஸ்லா கார்களை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

மேலும், டெஸ்லா அறிமுகம் குறித்த எலான் மஸ்க் பதிலுக்கு, டெஸ்லாவுக்காக நீண்ட காலமாக காத்திருக்கிறோம். இது மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட வேண்டிய செய்தி. என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இதற்கு எலான் மஸ்க்," காத்திருப்பதற்கு நன்றி,"என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்தியாவில் நேரடி அன்னிய மூதலீடு செய்வதில் பல்வேறு விதிமுறை சிக்கல்கள் உள்ளதாகவும், அதனால்தான் இந்தியாவில் அடியெடுத்து வைப்பதில் சிக்கல் இருந்து வருவதாகவும் ஏற்கனவே எலான் மஸ்க் குறிப்பிட்டு இருந்தார்.

அண்மையில், கர்நாடகாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவுவதற்கான முயற்சியில் டெஸ்லா ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியானது. மேலும், இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








