செல்லும் இடமெல்லாம் புகழை சம்பாதிக்கும் டெஸ்லா... கொரோனா காலத்தில் நிகழ்ந்த அதிசயம்...
முன்னதாக அமெரிக்கர்களின் மனதைக் கவர்ந்ததைப் போன்று தற்போது தென் கொரியர்களின் உள்ளத்தையும் வசீகரித்து வருகின்றது டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 மின்சார கார்கள். இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் டெஸ்லா நிறுவனம், தானியங்கி மின்சார வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிறுவனம் ஆரம்பத்தில் அமெரிக்காவை மட்டுமே மையமாகக் கொண்டு அதன் வர்த்தகத்தை நடத்தி வந்தது. ஆனால், தற்போது உலக நாடுகள் பலவற்றில் அதன் தயாரிப்புகளை விற்பனைச் செய்து வருகின்றது.

அந்தவகையில், அண்மையில்தான் தென் கொரியாவில் டெஸ்லா நிறுவனம் முதல் முறையாக கால் தடம் பதித்தது. அறிமுகமான புதிதில் இந்நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை படுமோசமாக இருந்து வந்தது. ஆனால், தற்போது அதன் விற்பனை கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது.

இது சாதாரண வளர்ச்சி என்று கூறிவிட முடியாது. ஏனென்றால், நம்பர் 1 இடத்தை இந்நிறுவனமே பெற்றிருக்கின்றது. இந்த இடத்தை டெஸ்லா பெறுவதற்கு மாடல்3 காரே உதவியிருக்கின்றது. இக்கார்தான் தென் கொரியாவின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக மாறியிருக்கின்றது.

இது, பிஎம்டபிள்யூ 5 செரீஸ் மற்றும் ஆடி ஏ6 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் ஆகிய கார்களை பின்னுக்கு தள்ளி இந்த இடத்தைப் பிடித்திருக்கின்றது.
இதற்கு இக்காரில் இடம்பெற்றிருக்கும் அட்வான்ஸ்ட் தொழில்நுட்ப அம்சமே முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது. இதனை உறுதிச் செய்யும் வகையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்லா காரை வாங்கிய நபர் ஒருவர் ராய்டர்ஸ் செய்தி தளத்திற்கு பதிலளித்துள்ளார்.

அவர் கூறியதாதவது, "எனக்கு கார்கள் மீது அதிக ஆர்வம் கிடையாது. இருப்பினும், டெஸ்லா காரில் இருக்கும் தொழில்நுட்ப அம்சங்களைக் கண்டு அக்காரை கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி வாங்கினேன். இந்த காரை வாங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பே ஹூண்டாய் க்ராஷோவர் காரை வாங்கியிருந்தேன். ஆனால், தற்போது இந்த காரை நான் பயன்படுத்துவதே இல்லை. என்னுடைய பெரும்பாலான பயணங்கள் டெஸ்லா மாடல் 3இல் மட்டுமே செய்யப்பட்டு வருகின்றது" என்றார்.

இவ்வாறு தென் கொரியர்கள் பலர் டெஸ்லா காரை தேர்வு செய்வதற்கு பல காரணங்களை கூறி வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் அக்காரில் இடம் பெற்றிருக்கும் அட்வான்ஸ்ட் தொழில்நுட்பத்தையேக் காரணமாக கூறுகின்றனர்.
எனவே, கடந்த ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையாகும் காராக டெஸ்லா மாடல் 3 மின்சார கார் உருவெடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2,827 யூனிட்டுகளை விற்பனைச் செய்து அந்த இடத்தை அக்கார் பிடித்தது.

கொரோனா வைரஸ் பரபல் ஆரம்பித்த காலத்தில் இந்த கார் கடுமையான விற்பனைச் சரிவைப் பெற்றது. ஆனால், தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறியிருக்கின்றது. பெரும்பாலான பணக்காரர்கள் மற்றும் சொகுசு பயணத்தை விரும்பும் மக்கள் பிற வாகனங்களில் பயணிப்பதைக் காட்டிலும் சொந்த வாகனங்களில் பயணிப்பதையே விரும்புகின்றனர்.

அந்தவகையில், வைரசுக்கு பயந்து புதிய வாகனத்தை வாங்கு தேடுபவர்களின் மத்தியில் டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் காரே முன்னணி இடத்தில் இருக்கின்றது.
தென் கொரியர்களின் இந்த மன நிலையால் அந்நாட்டையே மையமாகக் கொண்டு இயங்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் காரின் விற்பனையைக் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

கோனா எலெக்ட்ரிக் கார் முந்தைய கால விற்பனையைக் காட்டிலும் தற்போது 31 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. இதற்கு டெஸ்லா மாடல் 3 வருகையை மட்டுமே காரணமாக கூறிவிட முடியாது. இதற்கு கொரோனா வைரஸ் பரவலும் ஓர் காரணமே.
இருப்பினும், தென் கொரிய நாட்டு ஆட்டோத்துறை வல்லுநர்கள் டெஸ்லா மாடல் 3 வருகையே பிற வாகனங்களின் விற்பனை சரிவைச் சந்திப்பதற்கு காரணம் எனக் கூறுகின்றனர்.

டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் அதன் வசீகரமான தோற்றத்தினாலும், அம்சத்தினாலும் மக்களைக் கவர்ந்து வருகின்ற நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த முக்கியமான நடிகர்களில் ஒருவர் டிவி நிகழ்ச்சியின் மாடல் 3 காரைப் பயன்படுத்தியுள்ளார். இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் அக்காருக்கு இலவச விளம்பரத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. ஆகையால், டெஸ்லா மாடல் 3 மின்சார கார் அமோகமான விற்பனையைப் பெறுவதற்கு இதுவும் ஓர் காரணமாகக் கூறப்படுகின்றது.

டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 530 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதை அதிகம் நகரமல்லாத சாலையில் வைத்து பயன்படுத்தும்போது கூடுதல் மைலேஜை வழங்கும். இக்காரை சூப்பர்சார்ஜிங் முறையில் சார்ஜ் செய்தால் வெறும் 30 நிமிடங்களில் 270 கிமீ தூரம் வரை பயணிப்பதற்கான சார்ஜை பெற்றுவிட முடியும்.

இதற்கான தொழில்நுட்பம் மடால்3 மின்சார காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் அனைத்து மாடல்களுமே அதிக ரேஞ்ஜ் மற்றும் திறனை வெளிப்படுத்துபவையாக இருக்கின்றன. ஆனால், இந்நிறுவனத்தின் எந்தவொரு தயாரிப்பும் இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனை மாற்றும் முயற்சியில் டெஸ்லா நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications








