ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் களமிறங்கும் பிரபல கார் நிறுவனம்! எந்த நிறுவனம்னு தெரிஞ்சா அசந்துருவீங்க!
பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று விரைவில் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மின்சார வாகனங்களை மட்டுமே முக்கிய இலக்காகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று விரைவில் அதிக தொழில்நுட்பம் அடங்கிய ஸ்மார்ட் கைக் கடிகாரத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக மாறியிருக்கும் டெஸ்லா நிறுவனமே இந்த தரமான சம்பவத்தை விரைவில் அரங்கேற்ற இருக்கின்றது.

அறிமுகமான குறைந்த காலத்திலேயே உலக புகழ்பெற்ற நிறுவனமாக டெஸ்லா உருவெடுத்துள்ளது. இதன் வளர்ச்சி ஒட்டுமொத்த வாகன உலகத்திற்குமே பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. குறிப்பாக, அதிகம் விற்பனையாகும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு கார்களுக்கே டெஸ்லாவின் தயாரிப்புகள் கடும் போட்டியை வழங்கி வருகின்றன.

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் விற்பனையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்களையே அது ஓரங்கட்டியிருக்கின்றது. இத்தகைய புகழ் வாய்ந்த நிறுவனமே ஸ்மார்ட் கைக்கடிகாரத்தினைத் தயாரிக்கும் பணியில் களமிறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஓர் சிறுவர்களுக்கான ஸ்மார்ட் கைக்கடிகாரம் ஆகும்.

இதுமட்டுமின்றி இதில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய தயாரிப்பிற்காக டெஸ்லா நிறுவனம், நார்வே நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் எக்ஸ்பிளோரா எனும் நிறுவனத்துடன் இணைந்திருக்கின்றது.

தற்போது புதிய வாட்ச் தயாரிப்பது பற்றிய தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது. அதில், என்ன மாதிரியான சிறப்பம்சங்கள் இடம்பெறவிருக்கின்றன என்பது பற்றிய அதிகாரப்பூர்வமான தகவலை அந்நிறுவனங்கள் வெளியிடவில்லை. மேலும், இவ்விரு நிறுவனங்களின் இணைவு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கூட வெளியிடப்படவில்லை. அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையிலேயே இரு நிறுவனங்களின் இணைவு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஸ்மார்ட் வாட்சை கார் சாவியாகப் பயன்படுத்தும் அம்சமும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. டெஸ்லா நிறுவனம் எதிர்காலத்தில் அதன் பிரபல கார்களான மாடல் 3 மற்றும் மாடல் ஒய் ஆகிய கார்களுக்கு சாவியில்லா தொழில்நுட்ப வசதியை வழங்க இருக்கின்றது.

அதாவது, செல்போனை சாவியாக்கும் வகையில் இந்த கார்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன. இதன் ஆரம்பப்புள்ளியாகவே டெஸ்லா ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் களமிறங்கியிருக்கின்றது. மேலும், சிறுவர்களுக்காக பிரத்யேகமாக தயாராகி வரும் இந்த வாட்சைக் கொண்டே காரைக் கட்டுப்படுத்தும் வசதியும் வழங்கப்பட இருக்கின்றது.

இதுமட்டுமின்றி தனது எதிர்கால கார்களில் மைன்கிராஃப்ட் மற்றும் போக்கிமான் கோ உள்ளிட்ட கேம்களையும் வழங்க இருப்பதாக டெஸ்லா அறிவித்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் தானியங்கி தொழில்நுட்பத்துடனே காணப்படுகின்றன.

எனவே, ஆட்டோ மோடில் கார்கள் இயங்கும்போது பயணிகள் மேற்கூறிய கேம்களை எளிதாக விளையாட முடியும். எனவேதான், டெஸ்லா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பொழுதுபோக்கும் விதமாக விளையாட்டுகளை காரில் வழங்க இருக்கின்றது.

இத்துடன், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வான எலன் மஸ்க், தனது டுவிட்டர் பக்கத்தில், எந்த விளையாட்டு உங்களது டெஸ்லா காரில் இடம்பிடிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்?, தி விட்சர் இடம்பெற வேண்டுமா?, இவ்வாறு கேட்டுள்ளார்.
டெஸ்லா நிறுவனம் தற்போது ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் களமிறங்கியதைப் போலவே அண்மையில் உள்ளாடை விற்பனையிலும் களமிறங்கியது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








