சென்னை அருகே சியட் நிறுவனத்தின் புதிய டயர் தொழிற்சாலை: முதல்வர் பழனிச்சாமி துவங்கி வைத்தார்!
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ள சியட் நிறுவனத்தின் புதிய டயர் தொழிற்சாலையை முதல்வர் பழனிச்சாமி இன்று துவங்கி வைத்தார்.

டயர் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் சியட் நிறுவனம் தமிழகத்தில் புதிய டயர் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்தது. இதற்காக, கடந்த 2018ம் ஆண்டு தமிழக தொழில் துறையுடன் சியட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மதுரமங்கலத்தில் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் 150 ஏக்கர் பரப்பளவில் புதிய ஆலை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் துவங்கப்பட்டு அண்மையில் நிறைவு பெற்றது.

இந்த புதிய டயர் ஆலையில் உற்பத்தியை முதல்வர் பழனிச்சாமி இன்று நடந்த நிகழ்ச்சியில் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை அமைச்சர் சம்பத் மற்றும் சியட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிச்சாமி," நாட்டிலேயே டயர் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இருசக்கர வாகனம் முதல் விமான டயர்கள் வரை தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. அனைத்து முன்னணி நிறுவனங்களும் இங்கு டயர் ஆலையை அமைத்துள்ளன.

இந்தியாவின் 40 சதவீத டயர் உற்பத்தி தமிழகத்தில்தான் நடக்கின்றன. இந்த புதிய தொழிற்சாலயில் வாகன டயர்கள் மற்றும் அதை சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்,"என்று தெரிவித்தார்.

இந்த ஆலை சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை ஆலையாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆலையில் நேரடியாக 1,000 பேருக்கும், மறைமுகமாக 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.
சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுவதால், அந்நிறுவனங்களுக்கு டயர்களை நேரடியாக சப்ளை செய்யும் நோக்கத்தில் இந்த டயர் ஆலையை அமைத்துள்ளது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் டயர்கள் சில்லறை வர்த்தகத்திற்கு செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலையில் டயர் உற்பத்திக்காக தங்கு தடையற்ற மின் சப்ளை, சென்னை கோயம்பேடு அருகே உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து இந்த ஆலைக்கு தண்ணீர் சப்ளையும் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








