சென்னையின் டெட்ராய்டு அந்தஸ்தை மீட்டெடுக்க முண்டாசு கட்டிய முதல்வர் பழனிச்சாமி!
ஆசியாவின் டெட்ராய்டு என்ற அந்தஸ்தை சென்னை மீண்டும் பெறுவதற்கான அதிரடி முயற்சிகளில் முதல்வர் பழனிச்சாமி இறங்கி உள்ளார்.

இந்தியாவின் முக்கிய வாகன உற்பத்தி கேந்திரமாக சென்னை பெயர் பெற்றிருக்கிறது. ஆசியாவிலேயே அதிக அளவில் வாகன உற்பத்தி நிறுவனங்கள், உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனங்களும் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.

பிஎம்டபிள்யூ, ஹூண்டாய், ஃபோர்டு, ரெனோ - நிஸான் உள்ளிட்ட கார் நிறுவனங்களும், பாரஸ் பென்ஸ் உள்ளிட்ட வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் , ராயல் என்ஃபீல்டு, யமஹா உள்ளிட்ட இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும் சென்னை பெருநகரத்தில் செயல்பட்டு வருகின்றன.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

இந்த நிலையில், தமிழக அரசின் கொள்கை நிலைப்பாடு மற்றும் கொரோனா பிரச்னை உள்ளிட்டவற்றால் சென்னையின் டெட்ராய்டு அந்தஸ்து மெல்ல கரைந்து வருகிறது. இதனை சரிகட்டி, தொழிற்துறையில் தமிழகத்தை மீண்டும் முன்னோடி மாநிலமாக மாற்றும் முயற்சியில் முதல்வர் பழனிச்சாமி இறங்கி இருக்கிறார்.

இதற்காக, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு உலகின் 11 முன்னணி கார் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்தில் நிலவும் சாதகமான சூழல், மனித வளம், சிறப்புச் சலுகைகள் உள்ளிட்டவற்றையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹெர்பெர்ட் டயஸ், ஸ்கோடா தலைமை அதிகாரி பெர்ன்ஹார்டு மயர், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஓலா கல்லேனியஸ், ஆடி தலைவர் மார்கஸ் டியூஸ்மேன், டொயோட்டா தலைவர் அகியோ டொயோடா, பிஎம்டபிள்யூ தலைவர் ஆலிவர் ஸிப்ரே ஆகியோருக்கு நேரடியாக கடிதம் எழுதியுள்ளார்.

தவிரவும், ஜாகுவார் லேண்ட்ரோவர் தலைமை அதிகாரி ரால்ஃப் டி ஸ்பெத்,, ஜெனரல் மோட்டார்ஸ் தலைவர் மேரி டி பாரா, டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் ஆகியோருக்கும் முதல்வர் பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் வழங்கப்படும் சிறப்புச் சலுகைகள், ஏற்றுமதிக்கு ஏதுவான துறைமுகம், விமானப் போக்குவரத்து வசதி, சாலை போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளையும் குறிப்பிட்டுள்ளார். இதனால், முன்னணி கார் நிறுவனங்கள் இந்தியாவில் விரிவாக்கத் திட்டத்தை கையில் எடுத்தால், தமிழகத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளிலிருந்து மீள்வதற்காக சிறப்புக் குழு ஒன்றை முதல்வர் பழனிச்சாமி அமைத்தார். அந்த 17 பேர் கொண்ட குழுவினர் ஒவ்வொரு துறையிலும் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களை கண்டறிந்து நேரடியாக முதலீடு செய்ய அழைப்பு விடுக்குமாறு பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் இந்த கடிதத்தை அவர் அனுப்பி உள்ளார். ஏற்கனவே ஆப்பிள் மற்றும் அமேஸான் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் அவர் கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








