நாட்டிலேயே முதல் மாநிலம் தமிழகம்... 4 ஆயிரம் ஏக்கரில் மின் வாகன பூங்கா... பலே எடப்பாடியாரே..
நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மின் வாகனங்களுக்கான பூங்காவை உருவாக்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தொழிற் பூங்க, தொழில்நுட்ப பூங்கா ஆகியவற்றைப் போன்று தமிழகத்தில் மிக விரைவில் மின்சார வாகனங்களுக்கான பூங்காவும் அமைய இருக்கின்றது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்து ஐந்து மாதங்களுக்கு முன்பு மின்சார வாகனங்களுக்கான கொள்கைகளைப் பற்றி அறிவித்திருந்தநிலையில், தற்போது மின் வாகனங்களை உற்பத்தி செய்தல் மற்றும் கட்டமைப்பதற்கான பிரத்யேக தொழிற்பூங்காவை அமைக்க இருப்பதாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை (மார்ச் 13) அன்று தகவல் வெளியிட்டது.

இதற்கான இருப்பிடத்தை சென்னையை அடுத்துள்ள திருவள்ளூரில் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. அதாவது, மணலூரில் அமையலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் அரசு தரப்பில் எதுவும் வெளியிடப்படவில்லை.
அதேசமயம், விரைவில் அமையவிருக்கும் இந்த மின் வாகன பூங்க சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட இருக்கின்றது.

இதுகுறித்து, தொழிற்துறை அமைச்சர் எம்.சி சம்பத் கூறியதாவது, "ஆட்டோமொபைல் துறையில் தமிழகம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னிலையில் இருக்கின்றது. பிரெஞ்ச் நாட்டு நிறுவனமான பிஸ்ஏ-விடம் இருந்து தற்போது மாநிலத்திற்கு முதலீடு கிடைத்திருக்கின்றது. ஆகையால், 4 ஏக்கரில் இ-வாகனங்களுக்கான பூங்காவை அமைக்க இருக்கின்றோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மின்சார வாகன சந்தையில் மிக விரைவில் புரட்சி வெடிக்க இருக்கின்றது. இதில், தமிழகம் முன்னோடியாக இருக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கான கொள்கையை தமிழக அரசு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதமே அறிவித்துவிட்டது. குறிப்பாக, மாநிலத்தில் மின்சார வாகனங்களின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு மற்றும் மின் வாகனங்களுக்கான கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்வதற்கான நோக்கில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த பூங்காவிற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தமிழக அரசு சிப்காட்டின் அதிகாரிகள் சிலரை நியமித்திருக்கின்றது.

இவர்கள் பூங்காவிற்கு தேவையான மையங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவற்றை கட்டமைக்க உதவுவார்கள். தொடர்ந்து, இந்த பூங்காவில் பங்குகொள்ளும் சிறிய மற்றும் பெரிய வகையிலான நிறுவனங்களுக்கு வெவ்வேறு திட்டங்களின் வாயிலாக சிறப்பு ஊக்கத்தொகை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்தநிலையில், பிஎஸ்ஏ நிறுவனத்தைப் போலவே தைவானை தளமாகக் கொண்டு இயங்கும் டெல்டா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ரூ. 4 ஆயிரம் கோடி முதலீட்டில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் கருவிகளைத் தயாரிக்க திட்டமிட்டிருக்கின்றது.
இதற்கான உற்பத்தி மையம் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமைய இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிறுவனத்தின் வருகையால் தமிழகத்தில் 2 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர மேலும் சில நிறுவனங்களின் படையெடுப்பால் தமிழகத்தில் பதிதாக 4 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் சூழல் உண்டாகியிருக்கின்றது.

ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஏத்தர் எனர்ஜி நிறுவனமும் இணைந்து டெல்டா நிறுவனத்தைப் போன்று ரூ. 635 கோடி முதலீட்டில் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தியாலையை ஒசூரில் அமைக்க இருக்கின்றது. இதற்காக நான்காயிரத்திற்கும் அதிகமானோரை பணியமர்த்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இது 2021ம் ஆண்டிற்குள் அரங்கேறிவிடும் என கூறப்படுகின்றது.

இந்தநிலையில், ஹூண்டாய் நிறுவனமும் அதன் சென்னை உற்பத்தியாலையில் வைத்து புதிதாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் வாகனங்களை மார்ச் மாத இறுதிக்குள் தயாரிக்க இலக்கு நிர்ணயித்திருக்கின்றது. இதனை வரும் மாதங்களில் அதிகரிப்பதற்கான முயற்சியையும் ஹூண்டாய் செய்து வருகின்றது.

தமிழக அரசு இந்த மின்சார வாகனங்களுக்கான கொள்கைகளின் அடிப்படையில் புதிய தொழிற்பூங்காவை அமைப்பதோடு மட்டுமில்லாமல் தற்போது வழங்குவதைக் காட்டிலும் 20 சதவீத கூடுதல் மானியம் வழங்க இருக்கின்றது.

இத்துடன், குறைந்த வட்டியில் கடனுதவி போன்ற சலுகைகளை மின் வாகன உற்பத்தி நிறுவனம் மற்றும் மின்வாகனங்களுக்கு தேவையான பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வழங்க அரசு முடிவு செய்திருக்கின்றது. இந்த சிறப்பு திட்டங்கள் அனைத்தும் வருகின்ற 2025ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை நிலுவையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகளை பார்க்கையில் எதிர் காலத்தில் இந்தியாவின் அனைத்து சாலைகளையும் மின் வாகனங்களே ஆளும் என உறுதியாக தெரிகின்றது. மேலும், இவற்றிற்கான தேவை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் வருகின்றது. மின் வாகனங்கள், எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக களமிறக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், அவற்றின் விலை, அதனை அனைவராலும் எட்ட முடியாத பொருளாக மாற்றி வருகின்றது.

இந்த நிலையில், தமிழக அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் மின் வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதுடன், அவற்றின் விலையை கணிசமாக குறைய வைக்கவும் உதவும்.
ஒரு பொருளின் உற்பத்தி செலவு குறைந்தாலே அதன் விலையும் சற்றே குறையும். ஆகையால், தமிழகத்தில் எதிர்காலத்தில் மலிவு விலையில் மின்வாகனங்கள் விற்பனைக்கு கிடைக்கும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Source: ET Auto


Click it and Unblock the Notifications








