ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: அரசாணை வெளியீடு
ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த மார்ச் இறுதி வாரம் முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டடது. பின்னர், வர்த்தக செயல்பாடுகள், அவசர தேவைகள் கருதி, பல்வேறு தளர்வுகளுடன் தொடர்ந்து பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், நான்கு மாதங்களுக்கு பின்னர் நேற்றுமுதல் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வழிகாட்டு முறைகளுடன் ஓட்டுனர் பயிற்சிகள் செயல்படுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் பயிற்றுனர், பணியாளர்கள், பயிற்சி பெறும் ஓட்டுனர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருப்பதுடன், சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம்.

கர்ப்பிணி பெண்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், 65 வயதை கடந்த முதியவர்கள் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கு செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காரில் பயிற்சி வழங்கும்போது ஏசி போடக்கூடாது என்பதுடன் ஜன்னல்களை திறந்து வைத்து இயக்க வேண்டும். அதேபோன்று, பயிற்சி வழங்குகையில், பயிற்றுனர் மற்றும் அதிகபட்சமாக 2 பயிற்சி பெறும் ஓட்டுனர்கள் மட்டுமே காரில் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளிலும் சானிடைசர், உடல் வெப்பத்தை அளவிட உதவும் கருவிகள் கட்டாயம் இருக்க வேண்டும். பயிற்றுனர், அலுவலகப் பணியாளர்கள், பயிற்சி பெற வருவோருக்கு கட்டாயம் உடல் வெப்ப பரிசோதனை செய்வதும் அவசியம்.

ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிக்கு வருவோரின் பெயர், மொபைல்போன் எண், ஆதார் எண் உள்ளிட்டவை தனி பதிவேட்டில் சேகரிக்க வேண்டும் என்றும், அந்த பதிவேடு, அரசின் ஆய்வுப் பணி அதிகாரியிடம் காட்டுவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதும் அவசியம். கொரோனா தடுப்பு முறைகள் குறித்த வாசகங்களுடன் கூடிய அறிவிப்பு பலகைகளும் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளில் பொருத்துவது அவசியம். வகுப்பறைகளில் சமூக இடைவெளியுடன் பாடம் நடத்துவது அவசியம்.

ஒரே நேரத்தில் அதிக ஓட்டுனர்களை வைத்து பயிற்சி கொடுக்கக்கூடாது. கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை திறக்கக்கூடாது.


Click it and Unblock the Notifications








